அதிமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பார்ப்பை மீறி, எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் திருத்தணி தொகுதியில் போட்டியிடும் கோ.அரி, உட்கட்சி பூசலை தாண்டி வெற்றிக்கனி பறிப்பாரா என்பது பெரும் சவால் நிறைந்ததாக உள்ளது. திருத்தணி அதிமுகவில் கோ.அரி, பி.எம்.நரசிம்மன் அசைக்க முடியாத இரு சக்திகள். அவர்கள் இருவரும் ஒரே கட்சியில் இருந்தாலும் இரு வேறு திசைகளில் அரசியல் செய்து வந்தனர். கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், அதிமுக சார்பில் திருத்தணி கோ.அரிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், சொந்த கட்சிக்கு துரோகம் செய்து எதிர்கட்சி வெற்றிக்கு பாடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பி.எம்.நரசிம்மன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவில் திருத்தணி கோ.அரியின் ஆதிக்கம் அதிகரித்து, திருத்தணி அதிமுக என்றால் கோ.அரி என்ற நிலைக்கு கொண்டு வந்தார். இந்நிலையில், பி.எம்.நரசிம்மன் சசிகலா அணியில் சேர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோ.அரி போட்டி உறுதி என்ற நிலையில், கடந்த ஒரு மாதமாக அவர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல், சசிகலா அணி சார்பில் போட்டியிட பி.எம்.நரசிம்மன் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீட்டில் முருகனின் ஐந்தாம் படை கட்டாயம் பெற வேண்டும் என்று பாஜ, சாதி வாக்கு அடிப்படையில் பாமகவும் கடைசி வரை முயற்சி செய்தன.
இருப்பினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முழுமையான ஆதரவுடன் திருத்தணியை அதிமுக வசம் தக்கவைத்து கோ.அரியின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த முறை தோல்வி அடைந்தாலும், இம்முறை நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் களம் காணும் கோ.அரிக்கு, அதிமுகவில் நீண்ட கால தொடர்பு வைத்திருந்த பி.எம்.நரசிம்மன் சசிகலா கட்சி சார்பில் போட்டியிடுவது மற்றும் உட்கட்சியில் உள்ளடி வேலைக்கு எதிர்கட்சியாக செயல்படுபவர்களின் எதிர்ப்பை மீறி மக்கள் மன்றத்தில் கோ.அரி வெற்றிக்கனி பறிப்பது என்பது, ஒற்றை கயிறு மீது ஒரு முனையில் இருந்து வெற்றி என்ற மற்றொரு முனையை தொடுவது போல் பெரும் சவால் நிறைந்ததது தான்.
