அதிமுகவில் கோஷ்டி பூசலால் கூட்டணி கட்சிக்கு சென்ற பூந்தமல்லி தொகுதி: சாதி வாக்குகளை கைப்பற்ற திட்டம்?

 

 

தமிழக சட்டமன்ற தொகுதியில் ஐந்தாவது தொகுதியாக இருப்பது பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி. தேர்தல் அரசியலில் எப்போதும் கவனம் ஈர்க்கும் முக்கிய தொகுதியாக உள்ளது. சென்னையின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க, வேகமாக வளர்ந்து வரும் மேற்கு புறநகர் பகுதியாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூந்தமல்லி சென்னையின் மேற்கு நுழைவாயில் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தொகுதியில், திமுக மற்றும் அதிமுக மாறி மாறி வெற்றி பெற்ற வரலாறு கொண்டது. பொது தொகுதியாக இருந்த பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தனித் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சார்பில் ஏழுமலை போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார்.

அவரது மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களில் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஏழுமலையும் ஒருவர். அதன்பிறகு, 2019ம் ஆண்டு இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், நீண்ட இடைவெளிக்கு பிறகு திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து, கடந்த 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஆ.கிருஷ்ணசாமி போட்டியிட்டு தமிழ்நாட்டில் 2வதாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பாமக சார்பில் ராஜமன்னார் போட்டியிட்டார். இதில் 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக பெரும் வெற்றி பெற்றது.

கடந்த தேர்தலின் போதே அதிமுகவில் நிலவி வந்த கோஷ்டி பூசல் காரணமாக பூந்தமல்லி தொகுதி கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல், இந்த முறையும் அதிமுக கூட்டணி கட்சியான அமமுகவுக்கு பூந்தமல்லி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தமுறை அதிமுக சார்பில் எப்படியும் சீட் வாங்கி விடலாம் என்று முன்னாள் எம்எல்ஏவான இரா.மணிமாறன், 2019 இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாரிவாக்கம் வைத்தியநாதன் மற்றும் நேமம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பிரேம்நாத் ஆகியோர் கடுமையாக முயற்சித்து வந்தனர். இவர்களில் யாருக்கு சீட் கொடுத்தாலும் மற்ற கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் தேர்தலின்போது உள்ளடி வேலைகளில் ஈடுபடலாம் என்று அதிமுக தலைமைக்கு தகவல்கள் கிடைத்தன.

மேலும், பூந்தமல்லி தொகுதியில் அதிமுகவில் காட்டுப்பாக்கம் கவுதமன், முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் ஆகிய இருவரும் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு ஒன்றியங்களாகப் பிரித்த போதே அதிமுகவில் இரு கோஷ்டிகள் உருவானது. அதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்கள் அனைவரும் சீட் வாங்கித் தரும்படி, மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் பெஞ்சமினுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். இதில் யாருக்கு சீட் கொடுக்க பரிந்துரைத்தாலும் சிக்கல்தான் என்பதால் முடிவை தலைமையே எடுக்கட்டும் என்று விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனக்காக எம்எல்ஏ பதவியை பறிகொடுத்த முன்னாள் எம்எல்ஏவான ஏழுமலைக்கு எப்படியும் பூந்தமல்லி தொகுதியை பெற்றுத் தர வேண்டும் என்று டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் கொடுத்து தொகுதியை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சியான அமமுகவிற்கு பூந்தமல்லி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி தொகுதியில் அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏவான ஏழுமலை போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, பாமக, பாஜ, புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சியினரை சமாளித்து தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், நாம் தமிழர், தவெக போன்ற கட்சிகளால் அதிமுக வாக்குகள் கணிசமான அளவுக்கு பிரிந்து விடுமோ என்ற அச்சமும் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ள கோஷ்டி பூசல், கூட்டணிக் கட்சியினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் பூந்தமல்லி தொகுதி மீண்டும் திமுகவுக்கே வசமாகும் என்று அதிமுகவினர் புலம்பத் தொடங்கி விட்டனர். இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் பூந்தமல்லி சட்ட மன்ற தொகுதியில் திமுகதான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றது. அதற்கு முன்பாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிகமுறை வெற்றி பெற்றது. மேலும், மூன்று தேர்தல்களில் தான் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் கண்டு அதில் ஒரு முறை திமுகவும், இரண்டு முறை அதிமுகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: