பல்லாவரம் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு: எதிர்பார்த்து காத்திருந்த அதிமுகவினருக்கு கல்தா?…

 

வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தற்போது இருந்தே தேர்தல் நிலவரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சியினர் போட்டி போட்டுக் கண்டு தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு யார் யாருக்கு என்னென்ன தொகுதி என்ற நிலவரங்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், பல்லாவரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள ஐஜேகே கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நீண்ட நாட்களாகவே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக காத்திருந்த அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல்லாவரம் தொகுதி `திமுக கோட்டை’ என்று கூறப்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும், இதே தொகுதியில் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் இராஜேந்திரன் தரப்பினர் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் தரப்பினர் மற்றொரு கோஷ்டியாகவும் பிரிந்து தங்களுக்குத் தான் தொகுதி கிடைக்கும் என்ற ஆசையில் இருந்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை சந்தித்து தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனித்தனியாக தேர்தல் வேலைகளை பார்த்து வந்தனர். அவர்களது ஆசையில் மண்ணை அள்ளிப்போடும் வகையில், அதிமுக தலைமை தற்போது இருவரையும் புறக்கணித்து விட்டு, தனது கூட்டணி கட்சியான ஐஜேகேவுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தங்களது எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் வேலை செய்யாமல் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைவதற்கான உள்ளடி வேலையில், தற்போது இருந்தே ஈடுபடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இந்த கோஷ்டி மோதலால், திமுகவில் தொகுதி பங்கீடு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் கூட, திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி வாக்காளர்கள் பரவலாக பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: