சென்னை: தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. மாவட்டத் தலைவர்கள் 2 பேர் ராஜினாமா செய்துள்ளனர். தமாகா நிர்வாகிகள் வடசென்னை கிழக்கு மாவட்டத்தலைவர் பிஜு சாக்கோ, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் கட்சியில் இருந்து விலககியுள்ளனர்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா, தங்களுக்காக 12 தொகுதிகளை கேட்டு 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்திருந்தது. அதற்கு அதிமுக சம்மதிக்காததால், 8 தொகுதிகளை தமாகா கேட்டது. அதிமுக-விடம் இருந்து பதில் ஏதும் வராத நிலையில் கண்டிப்பாக 6 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டது தமாகா. ஆனால், 4 தொகுதிகளை மட்டும் ஒதுக்க அதிமுக முன்வந்தது.
இந்த நிலையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமாகா-வுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்தார். இதையடுத்து, தமாகா-வுக்கு ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது.
இந்த 5 தொகுதிகளிலும் பாஜக-வின் தாமரைச் சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இதே கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகா 6 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதால் தமாகா நிர்வாகிகள் 2 பேர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஒவ்வொரு தேர்தலிலும் ஜி.கே.வாசன் தவறான முடிவுகளையே எடுத்து வருகிறார். பெரிய கட்சியான அதிமுக சின்னத்தில் நிற்காமல் தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. கூட்டணியில் பெரிய கட்சியான இரட்டை இலை சின்னத்தை தவிர்த்துவிட்டு சுய லாபத்துக்காக தாமரையில் போட்டியிடுகிறார் வாசன்.
எங்களோடு கலந்து ஆலோசிக்காமல் தாமரையில் போட்டியிடும் முடிவை அவர் எடுத்துள்ளார். நாங்கள் அவரோடு சேர்ந்து பலி கடா ஆக முடியாது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறக் கூடிய ஒரு தொகுதியைக் கூட ஜி.கே.வாசன் வாங்கவில்லை. சென்னையில் ஒரு தொகுதியைக் கூட த.மா.காவால் கேட்டுப் பெற முடியவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
2016ல் ஜெயலலிதா 10 தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கச் சொன்னபோது, முடியாது எனக் கூறி மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். எங்களை போன்ற பல மாவட்டத் தலைவர்கள் ஜி.கே.வாசனின் முடிவால் அதிருப்தியில் இருக்கிறோம்.
