சொன்னாரு: ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது.
செஞ்சாரு: மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் வடிவமைத்து, 2024ம் ஆண்டு ஜூலை 1ல் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தனர். ஓராண்டுக்குப் பிறகு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிக் கல்விக்கான கல்விக் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.
தேசிய கல்விக் கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழி என மும்மொழிக் கொள்கை இடம்பெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாடு கல்விக் கொள்கையில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே கொண்ட இருமொழிக் கொள்கை இடம்பெற்றுள்ளது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் நீடிக்கும் என்று தேசியக் கல்விக் கொள்கை கூறும் நிலையில், கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. 3, 5, 8, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை பரிந்துரைக்கும் தேசிய கல்விக் கொள்கை 3, 5, 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால், மறுதேர்வு கட்டாயம் என்கிறது.
ஆனால், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையோ, மாணவர்களின் நலன் கருதி, பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதி செய்தது. 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை என்பது ட்ராப் அவுட் என்று சொல்லக் கூடிய மாணவர்களின் இடைநிற்றலை வெகுவாக தடுக்கும் என்றும், 10, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு என்று கல்வியாளர்கள், ஆசிரியர்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாடவேளைகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும். ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்தின் கீழ் வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரி பள்ளிபோல கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என்ற பல அம்சங்களை கொண்டது இந்த மாநிலக் கல்விக்கொள்கை. இதனையடுத்து, பள்ளி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வல்லுநர் குழு மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. புதிய பாடத்திட்டத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும் உயர்மட்ட குழுவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், கணிதவியல் நிபுணர் ராமானுஜம் ஆகியவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
