பனையூர் பண்ணையாருக்கு பெரம்பூரில் ஸ்மால் ஹவுஸ்? பத்திக்கிட்டு எரியும் சோஷியல் மீடியா; அலறுகிறார் இட்டுனு வந்து, இட்டுனு போறவர்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு யூகங்கள் அவரை சுற்றி வருகின்றன. இவை தானாக வருகின்றனவா அல்லது அவர்களது தொண்டர்கள் மற்றும் ஐடி விங்கில் உள்ளோர் சேர்ந்து இதனை சித்தரிக்கின்றனரா என்ற சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டே உள்ளது. ஒரு விஷயம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை வெளிப்படையாக சொல்வதற்கு பல நாட்கள் அல்லது சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு விஷயத்தையும் பேசு பொருளாக மாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என அவரது கட்சியினர் பரவலாக பேசி வருகின்றனர். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூர் கிருஷ்ணமூர்த்தி நகர் ஜவஹர் தெருவில் கட்சி அலுவலகம் தயார் செய்யப்பட்டது. தற்போது அந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதனிடையே பெரம்பூரில் விஜய் சொந்தமாக வீடு வாங்க போகிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் அபிராமி அவென்யூ ஒன்றாவது தெருவில் தேமுதிக முன்னாள் கவுன்சிலராக இருந்த சேகர் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.

இவரது மகன் சதீஷ் தற்போது தவெக கட்சியில் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். விஜய் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பட்சத்தில் அவர் ஓய்வு எடுக்கவும் தங்குவதற்கும் மேற்கண்ட வீட்டை தேர்வு செய்துள்ளதாகவும், இந்த வீட்டை இவர் சுமார் ரூ.7 கோடியே 40 லட்சம் கொடுத்து வாங்க உள்ளதாகவும், இதற்காக 2 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வருகின்றன. ஆனால் சேகர் இந்த வீட்டை விற்று விட்டதாகவும் தற்போது இந்த வீட்டை மகேஷ் என்பவர் வாங்கியுள்ளதாகவும், வங்கியில் இந்த வீட்டிற்கு கடன்கள் உள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

எப்போதும் போல எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கும் விஜய் அவர் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறாரா மேற்கண்ட வீட்டில் தங்கப் போகிறாரா என்பது குறித்து அவர்களது தொண்டர்களுக்கே தெரியவில்லை. குறிப்பிட்ட கண்ணதாசன் நகர் அபிராமி அவென்யூ பகுதியில் உள்ள அந்த வீட்டின் புகைப்படத்தை நேற்று சிலர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தங்கும் வீடு இதுதான் எனவும், சிலர் இந்த வீட்டை விஜய் வாங்கி விட்டார் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவரது கட்சியினரிடம் இதுகுறித்து விசாரித்த போது தலைவரை இட்டுனு வந்து, இட்டுனு போறது தான் எங்க வேலை.. மத்தபடி எங்களுக்கு எதுவும் தெரியாது என அவர்களது பொதுச் செயலாளர் பாஷையில் தெரிவித்தனர்.

* தெற்கு உனக்கு, வடக்கு எனக்கு…. அதிமுகவின் தொகுதிகளை
கூறு போட்ட பாஜ, பாமக; டெல்டா, கொங்குவையும் விட்டு வைக்கல…
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். கடந்தமுறையை விட இந்த முறை தொகுதி ஒதுக்கீட்டில் பல்வேறு வித்தியாசங்களும், அதிமுகவுக்கு ஏமாற்றங்களும் மிஞ்சியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாஜ தெற்கு எனக்கு என்றும், பாமக வடக்கு எனக்கு என்றும் அதிமுகவின் தொகுதியை பிரித்து எடுத்துகொண்டுள்ளது. அதேபோல் கொங்குமண்டலத்தையும் பாஜ விட்டுவைக்காததால் அதிமுகவில் பல மூத்த நிர்வாகிகளுக்கு சீட்டு கிடைக்காததால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்தமுறை பாஜவில் துறைமுகம், ஆயிரம் விளக்கும், தளி, திருவண்ணாமலை, திருக்கோயிலூர், மொடக்குறிச்சி, தாராபுரம், உதகமண்டலம், கோவை தெற்கு, அரவக்குறிச்சி, மதுரை வடக்கு, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, நாகர்கோயில், குளச்சல், விளங்கோடு, திட்டக்குடி, திருவரையாாறு, காரைக்குடி என 20 தொகுதிகளை போட்டியிட்டன. இந்த தொகுதிகள் வடமாவட்டம், தென்மாவட்டம், மத்திய மாவட்டங்கள் என்று சமபங்கீடு செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் இந்தமுறை வடமாவட்டங்களில் திருவண்ணாமலை ஒரு தொகுதி மட்டுமே பாஜவுக்கு ெபயரளவில் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் அனைத்தும் தென்மாவட்டங்களையும், கொங்குமண்டலங்களையும் பாஜ பிரித்து எடுத்துகொண்டது.

கடந்தமுறை போட்டியிட்ட திருக்கோயிலூர், திட்டக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பாஜ படுதோல்வியடைந்ததால் வடமாவட்டங்களில் போட்டியிடாமல் தங்களுக்கு ஏதுவான தென் மாவட்டங்களான திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், மதுரை, சாத்தூர், விளவங்கோடு, நாகர்கோயில், ராமநாதபுரம், குளிச்சல், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளையும், கொங்கு மண்டலத்தில் கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, உதகமண்டலம் என்றும் ெடல்டா மாவட்டத்தில் தஞ்சை, திருவாரூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய ெதாகுதிகளை எடுத்துக்கொண்டு வடமாவட்டங்களை கைவிட்டுள்ளது.

அதேபோல், வட மற்றும் டெல்டா மாவட்டத்தில் விழுப்புரம், சேலம் மேற்கு, சேலம் வடக்கு பென்னாகாரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட தொகுதிகளை அன்புமணி பாமக பறித்துவிட்டது. ஆகமொத்தம் அதிமுகவின் தொகுதிகளில் தென்மாவட்டங்களை பாஜவும், வடமாவட்டங்களை பாமகவும் தொகுதிகளை பகிர்ந்துகொண்டுள்ளது. மேலும், டெல்டா மற்றும் கொங்குவிலும் இருகட்சிகள் பல தொகுதிகளை பறித்து உள்ளது. இதனால் அதிமுகவில் பல மூத்த நிர்வாகிகளுக்கு சீட்டுகிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்துள்ளனர்.

* நயினாருக்கு எதிராக போர்க்கொடி
தேசிய கட்சியான பாஜவுக்கு மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவிவேற்றது முதல் அவர் சார்ந்த தென்மாவட்டங்கள், கொங்கு மண்டலத்தில் மட்டும் கட்சியை வளர்த்து வந்ததாக கூறப்பட்டன. அதன்படியே தற்போது தொகுதிகளும் கேட்டு பெற்றுள்ளதாக பாஜவில் அதிருப்தி எழுந்துள்ளது. வடமாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி என 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 60 தொகுதிகள் உள்ளன. இதில் திருவண்ணாமலை ஒரு தொகுதியை மட்டுமே பாஜ தலைவர் கேட்டுபெற்றுள்ளார். ஆவடி தொகுதி மாநகர பகுதியில் வரும். எனவே, வடமாவட்டங்களில் ஒரே தொகுதியை பெற்றால் எப்படி கட்சியை வளர்க்க முடியும். இதில் மாநிலத்தலைவர் பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளதாக வடமாவட்ட பாஜவினர் மாநிலத்தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Related Stories: