சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக மாநிலங்களவை எம்பி எல்.கே.சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அமைத்துள்ளார். இந்த குழு நேற்று மாலை அண்ணா அறிவாலயம் வந்து, திமுக குழுவிடம் 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை அளித்தனர். அதில் இருந்து 10 தொகுதிகளை தேர்வு செய்ய கேட்டுக் கொண்டனர்.
பின்னர் வெளியில் வந்த எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தில் தேமுதிகவை விமர்ச்சித்து பேசியுள்ளார். 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேமுதிக இல்லாமல் அதிமுகவின் ஆட்சியே வந்திருக்காது. இன்று விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி 2011ம் ஆண்டு எங்கு இருந்தார் என்பது அவருக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். தேமுதிக இல்லையென்றால் அதிமுக அன்றைக்கு ஆட்சியே அமைத்திருக்க முடியாது. நாங்கள் விரும்பிய 70% தொகுதிகளை திமுக வழங்க முன்வந்துள்ளது. நாளை (இன்று) காலை 11 மணிக்குள் எங்களின் தொகுதிகள் உறுதியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
