தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் அதிமுக-பாஜ கூட்டணி அமைத்து களம் கண்டது. இத்தேர்தலில், கோவை மாவட்டத்தில் பாஜவுக்கு கோவை தெற்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 9 தொகுதியிலும் அதிமுகவே போட்டியிட்டது. அதே பார்முலாதான் இப்போதும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கோவை தெற்கு தொகுதிக்கு பதிலாக, கோவை வடக்கு தொகுதி என ஒரே ஒரு தொகுதி மட்டும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதே வானதி சீனிவாசன்தான் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிட உள்ளார்.
கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை, கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ தனித்து போட்டியிட்டது. அக்கட்சி வேட்பாளராக அப்போதைய மாவட்ட தலைவர் நந்தகுமார் களம் இறங்கினார். இவர், 5,177 வாக்குகள் பெற்றார். அடுத்து நடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ. தனித்தே போட்டியிட்டது. அப்போது, அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வானதி னிவாசன் 33,113 வாக்குகள் பெற்றார். இந்த வாக்கு எண்ணிக்கை, முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகம் ஆகும்.
இதன்பிறகு, 2021 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ போட்டியிட்டது. அப்போதும், வானதி சீனிவாசன் இதே தொகுதியில் களம் இறங்கினார். இம்முறை இவர், 53,209 வாக்குகள் பெற்று, வெற்றிபெற்றார். இப்படி ஒவ்வொரு தேர்தலிலும், பா.ஜ பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இத்தொகுதியில் அதிகரித்து வந்தாலும், இம்முறை எனக்கு கோவை தெற்கு தொகுதி வேண்டாம்… என வானதி சீனிவாசன் ஓட்டம் எடுத்துள்ளார். காரணம், இத்தொகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகளவில் வசிப்பதால், இவர்களது ஓட்டு எனக்கு விழாது, எனது தோல்வி உறுதியாகவிடும் என்ற காரணத்தினால், இத்தொகுதியை உதறிவிட்டு, கோவை வடக்கு தொகுதிகளில் களம் காண்கிறார் வானதி சீனிவாசன்.
இவர், சார்ந்த சமுதாயத்தினர் கோவை வடக்கு தொகுதியில் அதிகம் பேர் வசிப்பதால், அத்தனை பேரும் தனக்குத்தான் ஓட்டுப்போடுவார்கள் என கணக்குப்போட்டு அத்தொகுதியை கட்சியின் மேலிடத்தில் கேட்டு, அழுத்தம் கொடுத்து, பெற்றுள்ளார். இம்மாவட்டத்தில், ஒரே ஒரு தொகுதியை மட்டும் பெற்றுக்கொண்டு, இவர் ஒரு நபர் மட்டும் வெற்றிபெற்றால் போதும் என நினைக்கிறாரே? கட்சியை வளர்க்க வேண்டும், கூடுதலாக மேலும் சிலருக்கு சீட் கேட்டு வாங்க வேண்டும் என்ற மனநிலை இல்லாமல், கட்சியை அதிமுகவிடம் அடகு வைக்கிறாரே? என வானதிக்கு எதிராக அக்கட்சியில் கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. முக்கிய நிர்வாகிகள் பலரும் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். இவர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றுவது சந்தேகம்தான் என்கிறார்கள், அக்கட்சியினர். உள்கட்சியிலேயே கசப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், வானதி கரையேறுவாரா? என்பது கடினம்தான் என்கிறார்கள்.
* சென்டிமென்ட் பீவர்… மக்களிடம் செல்வாக்கு போச்சு… சொந்த ஊரை விட்டு ஓடிய நயினார்
நெல்லையை பொறுத்தவரை மண்ணின் மைந்தன் என அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டசபை தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். 2001ம் ஆண்டு நெல்லை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் 5 ஆண்டு காலமும் அமைச்சராக இருந்தார். நெல்லை தொகுதியில் அதிமுக சார்பில் 4 முறையும் (2001, 2006, 2011, 2016) பாஜ சார்பில் ஒரு முறையும் (2021) அவர் போட்டியிட்டுள்ளார். 2001, 2011, 2021 ஆகிய தேர்தல்களில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார், 2006, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த முறை 2026 தேர்தல் வருகிறது. 6, 6 என முடியும் ஆண்டுகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால் 2026 தேர்தலும் தோல்வியில் முடியலாம் என நயினார் நாகேந்திரனின் அச்சமே தொகுதி மாறுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்டவர் அடுத்த தேர்தலில் தோற்று விடுவார். அது நயினார் நாகேந்திரனுக்கும் பொருந்தும். ஒரு பக்கம் தொகுதிக்கு எதுவும் செய்யாததால், மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துவிட்டது.இதுதவிர திமுக எப்படியாவது இம்முறை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்ற பயமும் நயினார் நாகேந்திரனை ஆட்டிப் படைத்தது. நெல்லை தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தென்கலம், தென்பத்து, மானூர், நல்லம்மாள்புரம், பள்ளமடை, உக்கிரன்கோட்டை, அழகியபாண்டியபுரம், குப்பனாபுரம், ரஸ்தா மற்றும் நெல்லை புறநகர் பகுதிகளில் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர்கள் உள்ளனர். தற்போது, அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெற்றுள்ளதால் தேவேந்திர குல வேளாளர்களின் ஓட்டு நமக்கு கிடைக்காது என்று முடிவுக்கு வந்த நயினார் நாகேந்திரன் கடந்த 4 மாதங்களாகவே தொகுதி மாறுகிறார் என்ற தகவல்கள் உலா வந்தன. எனினும் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் தான் போட்டியிடுவேன் எனக்கூறி சமாளித்து வந்தார்.
இந்நிலையில், பாஜ போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டதில் நயினார் தொகுதி மாறுவது உறுதியானது. நெல்லை மாவட்டத்தில் பாஜ போட்டியிடும் தொகுதியாக ராதாபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் விருப்ப தொகுதிகளான சாத்தூர் மற்றும் மதுரை தெற்கு தொகுதிகளும் பாஜவின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனால் நயினார் நாகேந்திரன் மண்ணின் மைந்தர் என்ற பட்டத்தை துறந்து இப்போது வெளிமாவட்ட தொகுதிக்கு செல்வது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் நெல்லை தொகுதியில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நயினார் நாகேந்திரன் செலுத்திய ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது. 2021ல் தனது விருப்ப தொகுதியை பாஜவுக்கு தாரை வார்த்து கொடுத்த அதிமுக இம்முறை மீண்டும் நெல்லை சட்டசபை தொகுதியில் களம் இறங்க உள்ளது.
