பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு அதிகரிப்பால் அழிவின் பிடியில் சிட்டுக்குருவிகள்

*சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம்

ஊட்டி : பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதால் சிட்டுக்குருவிகள் போன்ற உயிரினங்கள் அழியும் பட்டியலில் உள்ளதாக சிட்டுக்குருவிகள் தினத்தன்று வருத்தம் தெரிவிக்கப்பட்டது.நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் ஊட்டி ஹோபார்ட் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் அன்புசெல்வி வரவேற்று பேசுகையில், ‘‘எங்கள் பள்ளிக்கூடம் சிட்டுக்குருவிகள் வாழ்விடமாக உள்ளது. ஐநூறுக்கும் மேற்பட்ட குருவிகள் உள்ளது. ஊட்டி நகரின் பழைய பாரம்பரிய கட்டிடம் இது மட்டுமே உள்ளது. மாணவர்கள் சிட்டுக்குருவியின் வாழ்வோடு இணைந்து கல்வி கற்கின்றனர்’’ என்றார்.

ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் பேசுகையில், ‘‘எந்த உயிரினம் அழிந்தாலும் அது மனிதர்களைத்தான் பாதிக்கும். எனவே, சிட்டுக்குருவிகளைப் போன்று மக்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து வாழும் உயிரினங்களை பாதுகாத்திட வேண்டும்’’ என்றார்.

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ‘‘உலகளாவிய நிலையில் மனித நேசங்களை இழந்து வாடும் பறவை சிட்டு குருவிகள்தான். அபரிமிதமான பூச்சிக்கொல்லி மருந்துகள். இயற்கை சூழலுக்கு பாதகமான கட்டிடங்கள், தொழிற்சாலைகளின் மாசுக்கள், நீரோடைகள் நஞ்சாக மாறியுள்ளன.

பல்வேறு புதிய தொழில் நுட்பங்களால் வெளிவரும் கதிர் வீச்சுக்கள் தற்போது அதிகரித்துள்ளது. இது போன்று பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவிகள் அழிவின் பிடியில் உள்ளது. மேலும், சிட்டுக்குருவிகள் தனக்கு தேவையான கூடுகள் அமைக்க தேவையான இழை, நார்கள் போன்றவை சேகரிக்க மிகவும் சிரமப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் மக்கள் விழிப்புணர்வு காரணமாக சிட்டுக்குருவிகள் பரவலாக காணப்படுகின்றன’’ என்றார்.

சமூக ஆர்வலர் ஆர்.ஏ.தாஸ் பேசுகையில், ‘‘குழந்தைகளின் மனதில் சிட்டுக்குருவிகனை பாதுகாக்கும் உணர்வினை கொண்டு செல்லும்போது இயற்கையினை பாதுகாக்கும் நோக்கம் எதிர்காலத்தில் பலம் பெறும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தாளாளர் மார்கரெட் ஆர். ஸ்டீபன், சிபிலா ஜெயா வினோதினி, ரூத் பெலிசியா, ஜனாதீபம், டெய்சி எலிசபெத் ஆகிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: