புதுச்சேரியில் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே பரபரப்பு: பாஜ அமைச்சரின் மனைவி, மகன்கள் லாட்டரி அதிபர் மகன் கட்சியில் வேட்புமனு

புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. தேஜ கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையவில்லை. இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சூழலில் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது. கடந்த இரண்டு நாட்களாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நேற்று சாரம் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதேபோல் லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜ அமைச்சராக உள்ள ஜான்குமார் மனைவி ஜஸ்டின் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாகூர் தொகுதியில் போட்டியிட லஜக சார்பில் பாஜ அமைச்சர் ஜான்குமாரின் மகன் ரீகன் ஜான்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த தொகுதிக்கு மாற்று வேட்பாளராக மற்றொரு மகன் ரிச்சர்டு ஜான்குமார் மனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மணவெளி தொகுதியில் அனந்தராமன், திமுக சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் நித்தீஷ் திமோதி, உப்பளம் தொகுதியில் அனிபால்கென்னடி, மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஜெசிந்தா ஆகியோர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். காரைக்கால் நிரவி-டி.ஆர்.பட்டினம் சுயேட்சை வேட்பாளராக வி.எம்.சி.எஸ் மனோகரன், லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், அரியாங்குப்பம் தொகுதியில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் ரகுநாதன், மணவெளி தொகுதியில் பவித்ரா வீரமணி ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக, காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தாலும், அவர்கள் அக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளருக்கான ஏ மற்றும் பி பார்ம் இன்னமும் தாக்கல் செய்யவில்லை. தொகுதி பங்கீடு இறுதியானவுடன் வேட்பு மனுக்கள் பரிசீலனை முன்பாக தாக்கல் செய்யவுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் இதுவரை திமுக, காங்கிரஸ், லஜக, சுயேட்சைகள் உள்பட 12 பேர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தலைமை உத்தரவின்பேரில் மனுதாக்கல் -திமுக எம்எல்ஏ சிவா
திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறுகையில், கட்சி தலைமை அறிவுறுத்தலின் பேரில், புதுவையில் ஒரு சில தொகுதிகளில் திமுக சார்பில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். கூட்டணி தலைமை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அதன்பிறகு ஏ மற்றும் பி பார்ம் வழங்கப்படும், என்றார்.

Related Stories: