மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகேயுள்ள தூணில் தீபம் ஏற்றுமாறு உத்தரவிட கோரி ராம.ரவிக்குமார் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை கலெக்டர், கோயில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு ஏப். 8ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘இரு நீதிபதிகள் அமர்வில் தனி நீதிபதி விசாரணையிலுள்ள வழக்கிற்கு ஏப். 8 வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறி அந்த உத்தரவு நகலை நீதிபதியிடம் வழங்கினார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் 4.12.2025 அன்று பிறப்பித்த சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் செல்ல அனுமதித்த உத்தரவிற்கு மட்டுமே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த தடை பொருந்தும்’’ என்றார்.
அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘தடை உத்தரவில் முழுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளும் தடை விதிக்கப்பட்டதாக எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது? இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், இருதரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு, ஏப். 8 வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘அனைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளையும் எதிர்த்து தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களுக்கு இந்த இடைக்காலத் தடை பொருந்தும். இது தொடர்பாக நீதிமன்ற பதிவேட்டில் விளக்கம் கேட்டால் குழப்பத்தைத் தவிர்க்கலாம்’’ என்றார்.
அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘அது என் வேலை அல்ல. என் முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால உத்தரவின் படியே நான் நடப்பேன். நான் ஏன் விளக்கம் கேட்க வேண்டும்? அது என் வேலையா? இல்லை. இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பிக்கும் உத்தரவுக்கு கீழ்படிவது என் கடமை. நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளிப்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டிய மதுரை காவல்துறை அதிகாரிகள் ஏன் வரவில்லை? காவல்துறை அதிகாரிகள் எங்கே? முதலில் அதற்குப் பதில் சொல்லுங்கள். காவல் துணை ஆணையர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் தங்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அறங்காவலர்கள் மற்றும் கலெக்டருக்கு மட்டுமே நான் விலக்கு அளித்தேன். காவல்துறைக்கு அல்ல. அவர்கள் ஏன் என் முன் ஆஜராகவில்லை’’ என்றார்.
அரசு தரப்பில், ‘‘இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால் தான் அவர்கள் ஆஜராகவில்லை. வேண்டும் என்றால் பிற்பகலில் அவர்கள் ஆஜராவார்கள்’’ என கூறப்பட்டது. இதற்கு நீதிபதி, ‘‘இனிமேல் நான் அந்த போலீஸ் அதிகாரிகளின் முகத்தை பார்க்க விரும்பவில்லை. சட்டப்படி அவர்களை எப்படி கையாள வேண்டுமோ, அப்படி கையாளுவேன். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப். 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.
