வளர்பிறை சுப முகூர்த்த நாளில் தேர்தல்: வாக்குப்பதிவை பாதிக்குமா..? அரசியல் கட்சியினர் கலக்கம்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 23ம் தேதி (சித்திரை மாதம் 10ம் தேதி) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நாள் வளர்பிறை சுபமூகூர்த்த நாள். இந்த நாளில் ஏராளமான திருமணங்கள், கிரக பிரவேசங்கள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் கங்கா சப்தமி. முக்கிய கிராமப்புற கோவில்களில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.

குமரி மாவட்டத்தின் விவசாயப் பாரம்பரியத்தில் ‘பத்தாம் உதயம்’ என்பது மிக முக்கியமானது. சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெறும் இந்த நாளில், அதிகாலை 4 மணிக்கே விவசாயிகள் தங்கள் வயல்களில் இறங்கிவிடுவார்கள். ‘விதை ஒன்று போட்டால் வினை விளையாது, வாழ்வு விளையும்’ என்ற நம்பிக்கையில், ஏர் பூட்டி முதல் விதைப்பைத் தொடங்குவார்கள். இந்த ஆண்டு தேர்தல் நாள் என்பதால், ‘அதிகாலையிலேயே பொன்னேர் பூட்டிவிட்டு, கை கால்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு நேராக வாக்குச்சாவடிக்குச் சென்று விரலில் மை வைப்போம்’ என நாஞ்சில் நாட்டு விவசாயிகள் உற்சாகமாகத் தெரிவிக்கின்றனர்.

சித்திரை 10 என்பது இந்த ஆண்டின் மிகச்சிறந்த வளர்பிறை சுபமுகூர்த்த நாள். குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான திருமண மண்டபங்கள் ஓராண்டிற்கு முன்பே திருமண நிகழ்வுகளுக்காக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. முகூர்த்த நேரம் காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் இருப்பதால், திருமண வீட்டார் மற்றும் விருந்தினர்கள் வாக்குச் சாவடிக்கு வருவது தள்ளிப்போகலாம். மேலும் வாக்குபதிவுக்கு மணவீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் வாக்குசாவடிக்கு வராமல் போகலாம், சிலர் திருமண நிகழ்வுகளுக்காக வெளியூர் செல்ல நேர்ந்தால் அன்றையதினம் வாக்குப்பதிவு செய்வதற்கு சிக்கலை ஏற்படுத்தும். இது அரசியல் கட்சிகளை கலக்கமடைய செய்துள்ளது.

எனவே, பல திருமண அழைப்பிதழ்களில் ‘திருமணத்திற்கு வருபவர்கள் கையில் தேர்தல் மையுடன் வரவும்’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு விளம்பரம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. முகூர்த்தம் முடிந்த கையோடு மணமகன், மணமகள் இருவரும் பட்டுச் சேலை மற்றும் வேட்டியுடன் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் காட்சிகளை இந்த முறை அதிகம் எதிர்பார்க்கலாம். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அன்று விழாக்கள் நடைபெறுகின்றன. அன்னதானம், கறி விருந்து போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. காலை முதல் மாலை வரை விழாக்கள் நடைபெறும் நாள் இது ஆகும். இந்த நாளில் தேர்தல் தேதி இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மண்ணைப் போற்றும் ‘பத்தாம் உதயம்’, உறவுகளைக் கொண்டாடும் ‘திருமணம்’, உரிமையை நிலைநாட்டும் ‘தேர்தல்’ – இவை மூன்றும் ஒன்றிணைந்து வரும் இந்த ஏப்ரல் 23, தமிழ்நாட்டில் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாளாக அமையப் போகிறது. ஏர் பிடிக்கும் கைகளும், தாலி கட்டும் கைகளும் ஜனநாயகக் கடமைக்காக ‘மை’ வைக்கத் தயாராகிவிட்டன.

Related Stories: