போடி: தேர்தல் விதிமீறல் தொடர்பாக பாஜ, நாம் தமிழர் கட்சியினர் மீது போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், போடி தாலுகா எஸ்ஐ விஜய் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாகலாபுரம் கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் சுவற்றில், நாம் தமிழர் கட்சியின் போடி தொகுதி வேட்பாளர் கலையரசு என்பவரை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் போஸ்டர்களை அகற்றினர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், தேவாரம் சாலையில் சங்கராபுரம் கருப்பசாமி கோயில் முன்புறம் பாஜ சார்பில் அனுமதியின்றி கொடிமரம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டிருந்தது. கொடிக்கம்பத்தை அகற்றிய போலீசார், தேனி மாவட்ட பாஜ இளைஞரணி தலைவர் அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விஜய் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
