நடத்தை விதி அமலான சில மணி நேரத்தில் மதுரை, நெல்லையில் ரூ.3.40 லட்சம் பறிமுதல்

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை நேற்று மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மதுரை ராஜாக்கூர் பிரிவில் நேற்று மாலை பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது நரேஷ்குமார் என்பவர் ரூ.2 லட்சத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு வந்தார்.

அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த குழுவினர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் நெல்லையில் பாளை தியாகராஜ நகர் தனியார் பள்ளி அருகே நேற்று இரவு பறக்கும்படையினர் அவ்வழியாக வந்த காரை திடீரென நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த காரில் வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் ரூ.1.40 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அந்த பணத்திற்கு உரிய கணக்கு அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரத்திலேயே மதுரை, நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் முதன்முதலாக ரூ.3.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: