புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கட்டாய திருமணம் செய்ய வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்ற போது தடுத்த தாயை வெட்டிக்கொன்ற பாஜ நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவருக்கு காளியம்மாள் (44), விஜயலட்சுமி என்ற 2 மனைவிகள். இருவரும் தனித்தனியாக வசிக்கின்றனர். முதல் மனைவியான காளியம்மாளுக்கு சுவேதா (20), சுபதர்ஷினி (18) என்ற 2 மகள்களும், பாலமுருகன் (12) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இதில் சுபதர்ஷினி, சென்னை மேல்மருவத்தூரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி பி.காம் முதல் வருடம் படித்து வருகிறார். இந்நிலையில் 2வது மனைவியான விஜயலட்சுமியின் தம்பி விவின் (32), செங்கல்பட்டு மாவட்ட பாஜ அமைப்பு சாரா தொழிற்பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் சுபதர்ஷினியை திருமணம் செய்ய முடிவு செய்து, அக்கா விஜயலட்சுமியுடன் நெடுவாசலுக்கு சென்று காளியம்மாளிடம் பெண் கேட்டுள்ளார். அதற்கு காளியம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவின் செங்கல்பட்டுக்கு சென்று விட்டார்.
கடந்த 13ம்தேதி சுபதர்ஷனியை கட்டாய திருமணம் செய்வதற்காக விவின் மேல்மருவத்தூரில் தனது காரில் தயாராக இருந்தார். கல்லூரி முடிந்து விடுதிக்கு திரும்பி கொண்டிருந்த சுபதர்ஷனியை காரில் கடத்த முயன்றார். அப்போது அவரிடமிருந்து தப்பித்து விடுதிக்கு அவர் ஓடி சென்றார். பின்னர் இரவு பஸ் ஏறி சொந்த ஊரான நெடுவாசலில் உள்ள தாய் வீட்டுக்கு சுபதர்ஷனி வந்தார்.
தகவலறிந்து விவின், நண்பர்கள் 4 பேருடன் நேற்று அதிகாலை சுபதர்ஷனி வீட்டுக்கு சென்று அவரை காரில் கடத்த முயன்றனர். அவரது தாய் காளியம்மாள் தடுத்தபோது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காளியம்மாளை விவின் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து விவின் மற்றும் அவரது நண்பர்கள் காரில் தப்பி சென்றனர்.
தகவல் அறிந்த வடகாடு போலீசார் வந்து காளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே விவின் காரை போலீசார் மடக்கி பிடித்து அதிலிருந்த 4 பேரையும் வடகாடு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
