பல்லாவரம்: பல்லாவரம் அருகே ஐஆர்எஸ் அதிகாரி போல் நடித்து பெண்ணை 2வது திருமணம் செய்து 30 சவரன் நகை, பல லட்சத்துடன் தலைமறைவான நபரை, போலீசார் தேடி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கவுரி (33). இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவுரி, கணவருடன் விவாகரத்து பெற்று, தன் மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், மகளுக்கு 2வது திருமணம் செய்து வைக்க எண்ணிய கவுரியின் தந்தை, இதுகுறித்து மேட்ரிமோனியில் வரன் தேடி, மகளின் விவரங்களை பதிவு செய்திருந்தார்.
அதை பார்த்து ரமேஷ் (39) என்பவர், கவுரியை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை ஒரு ஐஆர்எஸ் அதிகாரி என்றும், சென்னை சுங்கத்துறையில் துணை ஆணையராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தான் ஒரு அனாதை என்றும், தனக்கு தாய், தந்தை, இல்லை. மனைவியும் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதை நம்பிய கவுரியின் குடும்பத்தினர், அவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி கவுரிக்கும், ரமேஷூக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும், அனகாபுத்தூரில் உள்ள கவுரி வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான். இந்நிலையில், கடந்த 2ம் தேதி ரமேஷ், தன் மனைவி கவுரியிடம், தான் அலுவலக வேலையாக பெங்களூரு மற்றும் அலகாபாத்தில் நடைபெறும் மீட்டிங்கில் கலந்துகொள்ள செல்வதாக கூறி சென்றார். கடந்த 8ம் தேதி இவர்களது ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கும் ரமேஷ் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மனைவி கவுரி, கணவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே கவுரி, ரமேஷ் எங்கு சென்றார் என்று விசாரித்தபோது, தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில், ரமேஷ் அசாமில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தபோது, அங்கு ஏற்பட்ட கலவரத்தில் ஒரு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காலில் வலி ஏற்பட்டதால், அப்பணியை செய்ய முடியாமல் போனது என்றும், அதனால் தான் ஐஆர்எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, தற்போது சென்னையில் சுங்கத்துறை துணை ஆணையராக பணியாற்றி வருவதாகவும் பொய் சொல்லி, தன்னை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும் ரமேஷ், கவுரியிடம் 30 சவரன் நகைகளை வாங்கிக்கொண்டு, அதனை புது கேரள மாடல் நகையாக மாற்றித் தருவதாகவும், ஏமாற்றி எடுத்துச் சென்றதும், கவுரியின் உறவினர்களிடம் கஸ்டம்ஸ்சில் நகை மற்றும் செல்போன் குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகக் கூறி, ரூ.7 லட்சமும், வேலை வாங்கி தருவதாக கூறி சிலரிடம் ரூ.20 லட்சத்தையும் பெற்றுக்கொண்டு தலைமறைவானது தெரியவந்தது. பின்னர் கவுரி, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார், வழக்குப் பதிவு செய்து, நகை பணத்துடன் தலைமறைவான போலி ஐஆர்எஸ் அதிகாரி ரமேஷை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். போலி அதிகாரி வேடத்தில், பெண்ணை ஏமாற்றி நகை, பணத்தை திருடிச்சென்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
