ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு உதவிய வாலிபர் பிடிபட்டார்: மலேசியாவில் இருந்து வந்த போது விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வியாசர்பாடியை சேர்ந்த நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 30 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 28 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணா உள்ளிட்ட இருவர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ததாக பிராட்வே கோழி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் அலி (36) என்ற நபரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பே மலேசியாவுக்கு சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவரை விமான நிலைய போலீசார் பிடித்து செம்பியம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். செம்பியம் போலீசார் கடந்த 2 நாட்களாக முகமது ரிஸ்வான் அலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட நபர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மொட்டை கிருஷ்ணாவுக்கு நெருக்கமானவர் என்பதும், சம்பவ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணா வெளிநாட்டுக்கு தப்பி செல்ல இவர் ஏதாவது உதவி செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: