வீடுதோறும் 5முறை சென்றுவிட்டோம்: வெற்றியை அறுவடை செய்யும் நேரம் இது; திமுக மாணவர் அணி செயலாளர் வீரமணி

1. உங்களைத் திமுகவின் முதல் பெண் மாணவரணிச் செயலாளராக நியமித்துள்ள நிலையில், உங்களின் உணர்வு எப்படி உள்ளது.
என்னை இந்தப் பொறுப்புக்கு நியமித்த திமுக தலைவருக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவ நாயகன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பல கட்சிகள் பெண்களுக்கு 2000, 2500 தருகிறோம், குலவிளக்கு ஏற்றுகிறோம் எனச் சொல்கிறார்கள். ஆனால் முதல்வர் தேர்தலைக் கடந்து ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பெண்களுக்குக் கலைஞர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட பல திட்டங்களைக் கொடுத்தார். இந்த திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாகவே இருந்தது. ஆட்சியில் மட்டுமல்லாமல் கட்சியிலும் பாலின சமத்துவத்தை நிறுவும் நாயகன். திமுகவில் 25 அணிகள் உள்ளது. படிப்படியாக பெண்களுக்கான இடம் உயரும். திமுக 75 ஆண்டுகாலமாக இயங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்சி. இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி. இந்தக் கட்சியில் மகளிர் அணிக்கு அப்பாற்பட்டு, திமுகவின் முதல் அணியான, மாணவர் அணியின் பெருமைமிகு பொறுப்பை எனக்குக் கொடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. திமுகவில் உள்ள ஒவ்வொரு பெண் நிர்வாகியும் அவர்களுக்கு அணிச்செயலாளர் பதவி வழங்கியது போலக் கொண்டாடுகிறார்கள்.

2. எல்லாக் கட்சிகளும் மகளிரணிக்கு மட்டுமே பெண்களைச் செயலாளராக நியமிப்பார்கள். ஆனால், தற்போது திமுகவில் மாணவரணிக்குப் பெண் செயலாளரை நியமித்துள்ளது குறித்த உங்களின் கருத்து?
அந்தக் காலத்தில் கலைஞர்தான் 33 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார். அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தார். மாணவரணிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே துணைச் செயலாளர்களாக இரண்டு பெண்களை நியமித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மாவட்டவாரியாகவும் பெண்களை நிர்வாகிகளாக நியமித்தார். தற்போது, அதன் தொடர்ச்சியாக மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பை எனக்குக் கொடுத்துள்ளார் முதல்வர். இப்போது மற்ற அணிகளில் உள்ள பெண் நிர்வாகிகளுக்கும் நன்றாக வேலை செய்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

3. திமுக மாணவரணியின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தவும், மாணவர்களை அரசியல்படுத்தவும் உங்களின் திட்டங்கள் என்ன?
தற்போது மாணவர்கள் அதிகமாகச் சமூக வலைதளங்களில் செயல்படுகிறார்கள். அதனால் மாவட்ட அமைப்பாளர்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி அளிக்கத் தீர்மானித்துள்ளோம். சமூக வலைதளங்கள் மூலமாகவும் எங்களது தேர்தல் பரப்புரை இருக்கும். அதேபோல் கல்லூரிகளுக்குச் சென்று திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்காகச் செய்த சாதனைகளையும், நமது வாழ்க்கை தரம் எவ்வாறு மேம்பட்டு உள்ளது என்பதையும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறோம். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நமது முன்னோர்கள் எவ்வாறு இருந்தார்கள், மொழிக்காகவும், இடஒதுக்கீடுக்காகவும் எவ்வாறு போராடினார்கள் என்பது தொடர்பான வரலாறுகளைத் தெரியப்படுத்த இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பயிற்சிப் பாசறைகள் நடத்தி வருகிறார். தேர்தல் முடிந்த பிறகு இளைஞரணியும் மாணவரணியும் இணைந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் சொல்லி மாணவர்களை அரசியல்படுத்துவோம்.

4. தேர்தல் களம் எப்படி உள்ளது? நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவாரா?
ஏற்கனவே திமுக தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டது. ஜூன் மாதத்தில் இருந்து மக்களைத் தொடர்ச்சியாக சந்தித்து, ஒவ்வொரு வீட்டிற்கும் திமுகவினர் ஐந்து முறை சென்று விட்டார்கள். எஸ்ஐஆர், ஸ்டாலின் மகளிர் படை ஆகியவற்றுக்காக எங்களது மகளிர் ஒவ்வொரு வீடாகச் சென்று வேலைகள் செய்துள்ளார்கள். எங்கள் தேர்தல் வேலைகளை முடித்து, வெற்றியை அறுவடை செய்யக்கூடிய நேரத்தில் உள்ளோம். விஜய்யின் கட்சி ஒரு கானல் நீராக இருந்தது. தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல; தனது மனைவியின் விவாகரத்து வழக்கை வொர்த் இல்லை என்று சொல்லும் இவர், வொர்த் இல்லாத ஆள்தான் போல என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். இன்னும் 20 நாளில் அவர் எப்படியும் வாஷ்அவுட் ஆகிவிடுவார். மீண்டும் கண்டிப்பாக திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அரியணை ஏறுவார்.

Related Stories: