சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நேற்று ஆலோசனை நடத்தியது. அடுத்த வாரத்தில் அறிக்கையை தயாரித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ, இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டது. இதில் பொதுமக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று கருத்துகளையும், பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் கனிமொழி எம்பி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவினர் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் என்னென்ன விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஈடுபட தொடங்கியுள்ளனர். அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துகளை அறிக்கையாக தயாரித்து இந்த குழு அடுத்த வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க திட்டமிட்டுள்ளது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சரிபார்ப்பு செய்து ஒப்புதல் வழங்குவார். அதன் பின்னர் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, கனிமொழி எம்பி சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் அறிக்கை தொடர்பாக அவர் கேட்டறிந்தார். மேலும் அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
