1.4 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்: முதல்வர் மம்தா உற்சாகம்

விவசாயிகள் தினத்தை முன்னிட்டு 2007ஆம் ஆண்டு இதே நாளில் நந்திகிராமத்தில் நடைபெற்ற நில கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 14 பேருக்கு அஞ்சலி செலுத்திய மம்தா பானர்ஜி, விவசாயிகளுக்கான தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இதுபற்றி தனது எக்ஸ் பதிவில்,’ கிருஷக் பந்து என்ற புதிய விவசாய திட்டத்தின் கீழ், மேற்குவங்க அரசு இதுவரை ரூ. 30,051 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம் 1.14 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், குத்தகை விவசாயிகள் மற்றும் பயிரிடுபவர்கள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆண்டுதோறும் ரூ. 10,000 பெறுகின்றனர்; அதேவேளையில், மிகச் சிறிய அளவிலான நிலங்களை வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் ரூ. 4,000 பெறுகின்றனர். இந்தத் தொகையானது, காரிப் மற்றும் ரபி ஆகிய இரு பருவங்களின்போது, ​​இரண்டு தவணைகளாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் ரூ. 4,000 நிதியுதவி இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது.

மார்ச் 8ஆம் தேதி முதல், சுமார் 28 லட்சம் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளில் இத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தின் வருமானம் ஈட்டும் உறுப்பினராகத் திகழ்ந்த தங்கள் அன்புக்குரியவர்கள் உயிரிழந்த பிறகு, 1.70 லட்சத்திற்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் ரூ. 3,419 கோடி மதிப்பிலான நிவாரண உதவியைப் பெற்றுள்ளனர். மேலும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீட்டிற்கான முழு பிரீமியத் தொகையையும் மாநில அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, இதுவரை 1.15 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ. 4,005 கோடிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

* கேரளாவில் பெண்களுக்கு மட்டுமல்ல… மூத்த குடிமக்களுக்கும் இலவச பஸ் பயணம்: இடதுசாரி கூட்டணி தேர்தல் அறிக்கையில் அறிவிக்க திட்டம்
கேரளாவில் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த ஒரே கூட்டணி என்ற பெருமை இடதுசாரி கூட்டணிக்கு உள்ளது. இந்த சாதனையையும் முறியடித்து ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பொதுவாக தேர்தல் முடிவுகள் வரும் வரை இடதுசாரி கூட்டணியில் யார் முதல்வர் என்று அறிவிக்க மாட்டார்கள். ஆனால் பினராயி விஜயன் தான் அடுத்த முறையும் முதல்வர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இப்போதே அடித்துச் சொல்கின்றனர்.

பினராயி விஜயன் தான் இந்த தேர்தலிலும் கேப்டனாக இருப்பார் என்று சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபியும் சொல்கிறார். ஆனால் அதெல்லாம் இந்த முறை நடக்காது என்று காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கை தெரிவிக்கிறது. இதற்காகத்தான் கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கேரளா முழுவதும் ஒரு யாத்திரை நடத்தினார். அதன் இறுதி விழாவில் ராகுல் காந்தியை திருவனந்தபுரத்திற்கு அழைத்து வந்து ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.

அதை தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாகவே காங்கிரஸ் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி அதிரடியாக ஒரு தேர்தல் வாக்குறுதியையும் அறிவித்தார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் இலவச பஸ் பயணத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். இது இடதுசாரி கூட்டணிக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. இதனால் காங்கிரசுக்கு போட்டியாக பெண்களுக்கு மட்டுமல்லாமல் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச பஸ் பயணத் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்க இடதுசாரி கூட்டணி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

* ரங்கசாமி கண்டிஷன் பாஜ மேலிடம் அதிருப்தி
புதுச்சேரியில் தேஜ கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் என். ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜ 14 இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் மேலிட பொறுப்பாளர் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் ரங்கசாமி கூறும்போது, பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளான அதிமுக, லஜகவுக்கு இடம் ஒதுக்கி கொள்ள வேண்டும். அதே நேரத்தில் 5 ஆண்டா தேஜ கூட்டணியை கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது பிற கட்சிகளில் சீட்டு இல்லை என்றதும் நம்ம கூட்டணிக்கு ஓடி வர்றவங்களை இருவருமே ஏற்ககூடாது. வேட்பாளர் தேர்விலும் இதேபோல், கூட்டம் நடத்தி சாதக, பாதக அம்சங்களை கலந்து பேசிய பிறகுதான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பா நமக்கு எதிராக அரசியல் செய்யும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க கூடாது.

மேலிடப்பொறுப்பாளர் சுரானா, கூட்டத்தில் ஒன்று பேசிவிட்டு, வெளியே பத்திரிகையாளர்களிடம் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். தேஜ கூட்டணிக்கு தலைவர் என்ற முறையில் என் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் நான் சொல்லும் ஆலோசனைகள் வேட்பாளர் தேர்விலும் கடைபிடிக்க வேண்டும், என்றார். என்ன இது, நம்ப கூட்டணியில் வாங்கியிருக்கும் 14 சீட்டுகளில் வேட்பாளர் யார்? என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்கிற மாதிரி ரங்கசாமி பேசுகிறாரே என்று பாஜ மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. குறிப்பாக அதிமுகவுக்கு கூடுதல் இடங்களை வழங்க வேண்டும் என ரங்கசாமி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

* தனிக்கூட்டணி தலைவலியா? ஜார்க்கண்ட் முதல்வருடன் அசாம் காங்கிரஸ் சமரசம்
அசாம் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சோதனை களமாக மாறி இருக்கிறது. இருக்கும் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்களை ஆளும் பா.ஜ உருவிக்கொண்டு இருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை அப்படியே நிற்கிறது. இந்த நிலையில் பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஒரு சீட் கூட பெற முடியாததால் தேர்தல் புறக்கணிப்பு செய்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அசாம் தேர்தலில் அங்குள்ள மலைவாழ், பழங்குடியின மக்கள் கட்சியான ஜெய் பாரத் பார்ட்டியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கப்போவதாக அறிவித்தார்.

பழங்குடியின, ஆதிவாசி மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் 19 தொகுதிகள் உள்ளன. அங்கு சமீபத்தில் பலமுறை ஹேமந்த் சோரன் சென்று அந்த மக்களை சந்தித்து வந்துள்ளார். இந்த பகுதி ஓட்டுகள் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு விழுந்து வந்த நிலையில், அதை பிரிக்கும் வகையில் தனிக்கூட்டணி அமைக்க ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திட்டமிட்டதால் அசாம் காங்கிரஸ் கட்சி ஆடிப்போய்விட்டது. உடனே தனி விமானம் பிடித்து ஜார்க்கண்ட் சென்று அங்கு முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து சமரசம் பேசினர்.

அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் ஜிதேந்திர சிங், ஜார்க்கண்ட் மாநில விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே. ராஜு ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெற்று இருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் சமரச முயற்சி நடந்தது. இதன்பிறகு ஹேமந்த் சோரன் கூறுகையில், ‘இந்த சந்திப்பு பற்றிய அனைத்து தகவல்களும் மெல்ல மெல்ல, உங்கள் அனைவருக்கும் தெரியவரும். அசாமில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருப்பதை முன்னிட்டு, தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காகப் பல கட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முறை அசாமில் நிச்சயம் ஏதோ ஒரு சிறந்த விஷயம் நடக்கும் என்று நான் கருதுகிறேன்’ என்றார்.

Related Stories: