பெரம்பூர்: ஓட்டேரி எஸ்பிஆர் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(43), வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி சவுகார்பேட்டையில் வெள்ளிக் கட்டிகளை விற்றுவிட்டு ரூ.26.41 லட்சத்துடன் பைக்கில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பணப்பை மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த அசோக்(40) என்பவர் பணப்பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனிடையே, அசோக் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றம் அசோக்கை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து, ஓட்டேரி போலீசார் சிறையில் இருந்த அசோக்கை நேற்று முன்தினம் நீதிமன்ற அனுமதி பெற்று 2 நாட்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், கையில் கிடைத்த பணத்தில் புதிதாக இருசக்கர வாகனம், அடகு வைத்த நகைகளை மீட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அசோக்கின் மனைவி கவிதாவிடம் இருந்து ரூ.17 லட்சம் ரொக்கம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருடுபோன பையில் ரூ.26.41 லட்சம் இருந்தாக தினேஷ் குமார் தெரிவித்தார். தற்பொழுது ஓட்டேரி போலீசார் ரூ.17 லட்சம் பறிமுதல் செய்த நிலையில், மீதம் உள்ள பணம் குறித்து அசோக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
