சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டுகள் (2021-2026) சாதனைகளை விளக்கும் குறும்படம் எல்இடி திரையில் திரையிடுவதை நேரில் பார்வையிட்டார். சென்னை மாநகரில் சீரான போக்குவரத்திற்கு கட்டப்பட்டுள்ள கொளத்தூர் வில்லிவாக்கம் எல்.சி.1 ரயில்வே கேட்டில் மேயர் சிட்டிபாபு பாலம், மாம்பலம் ரயில் நிலையம் முதல் தி.நகர் பேருந்து நிலையம் வரை ஆகாய நடைமேம்பாலம், ஸ்டீபன்சன் சாலையில் செங்கை சிவம் பாலம், ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் பாலம், புழல் உபரிநீர் கால்வாயின் குறுக்கே ஆமுல்லவாயல், பர்மா நகர் மற்றும் வடபெரும்பாக்கம் ஆகியவற்றில் 3 பாலங்கள், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே நடைமேம்பாலம், கூவம் ஆற்றின் குறுக்கே அருணாச்சலம் சாலையில் பாலம், கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே பெட்டக வடிவப் பாலம், யானைக்கவுனி மேம்பாலம், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் சாலையில் உயர்மட்ட பாலம், போஜராஜன் நகர் – ரயில்வே சந்திக்கடவின் குறுக்கே வாகனச் சுரங்கப்பாதை, கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் ரயில்வே 2பி கேட்டில் பாலம் உள்ளிட்ட மொத்தம் ரூ.725.82 கோடி செலவில் 19 புதிய பாலங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ளது குறித்து விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.
மேலும், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை (ம) ராஜிவ்காந்தி சாலையை இணைக்கும் பாண்டியன் தெரு – அண்ணா நகர், துரைப்பாக்கம் பகுதியில் புதிய பாலம் உள்ளிட்ட மொத்தம் ரூ.686.24 கோடி மதிப்பீட்டில் 17 புதிய பாலங்கள் கட்டும் பணிகள் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது. பட்டினப்பாக்கம்-சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் சாலை மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.17.61 கோடி மதிப்பில் நவீன மீன் அங்காடிகள், ரூ.2,359.73 கோடி மதிப்பீட்டில் 3,455.44 கி.மீ. நீளத்திற்கு 19,849 பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள், ரூ.6,495 கோடி மதிப்பீட்டில் 1422.28 கி.மீ. நீளத்திற்கு புதியதாக மழைநீர் வடிகால் பணிகள், ரூ.91.04 கோடி மதிப்பில் 60 நீர்நிலைகளில் புனரமைப்பு பணிகள், ரூ.296 கோடி மதிப்பில் 37 நீர்வழிக்கால்வாய்களில் வெள்ளத் தடுப்பு சுவர், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் ரிப்பன் மாளிகையை மாறுபடும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டும் பணி, ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கம், ரூ.6 கோடி மதிப்பீட்டில் மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை, மெரினா கடற்கரை (கட்டம் 2), திருவான்மியூர், உத்தண்டி, பாலவாக்கம் ஆகிய 4 இடங்களில் ரூ.25.20 கோடி மதிப்பீட்டில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தை செயல்படுத்துதல் குறித்தும்;
பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் ஒருங்கிணைப்புப் பணிக்காக வடக்கு, மத்திய, தெற்கு மண்டலங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரூ.57.76 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாளிகையில் சீர்மிகு ஆளுமை கட்டிடம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் பல்நோக்கு ஒருங்கிணைந்த பிராட்வே போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டுமானப்பணி, ரூ.75 கோடி மதிப்பீட்டில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மன்றக் கூடம் கட்டுமானப்பணி, ரூ.58.37 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரி புனரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி, துணைமேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், இணை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
