காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மே 31க்குள் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம்

சென்னை: காலி மதுபான பாட்டில்களை பொது இடங்களில் வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 28 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த அவகாசம் வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்று, ஒரு மாத அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபாட்டில்களுக்கு கியூஆர் கோடு பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்த பணிகள் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், காலி பாட்டில்களை திரும்ப பெறும் விவகாரத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை இருக்காது. காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துக்கு பணியாளர்களின் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் முழுமையாக அமல்படுத்த இயலவில்லை.

தற்போது 29 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களில் அமல்படுத்த கடைசி வாய்ப்பாக மே மாத இறுதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஒரு மாத அவகாசம் வழங்கியும் மீதமுள்ள மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. பணியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். தினமும் 2 கோடி மது பாட்டில்களில் விற்கப்படுகிறது. எனவே, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மே 31ம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்படுகிறது.

அவ்வாறு அமல்படுத்த தவறினால், அதன்பின் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 வீதம் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்குமாறு உத்தரவிடப்படும். காலி பாட்டில்களை சேகரிக்கும் போது, மூட்டை மூட்டையாக கட்டிப்போடுவதால் அவற்றில் சில உடைந்து சேதமாகும். காலி பாட்டிகளை முறையாக கையாளுமாறு உரிய அறிவுறுத்தல்களை டாஸ்மாக் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: