ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.3112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிலுவை தொகை ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. கிராம பகுதிகளிலுள்ள 1.25 கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகளை வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெருத்த முன்னேற்றத்தைச் சாதித்துள்ளது. இதற்கிடையில் இந்த இயக்கத்தினை மேலும் விரிவாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவினை வரவேற்கின்றோம். ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு 45 புதிய பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டு குடிநீர் திட்டங்களையும், 56 பழைய கூட்டு குடிநீர் திட்டங்களையும் மற்றும் 21,258 ஒற்றை கிராம திட்டங்களையும் மொத்தமாக ரூ.18,123 கோடி செலவில் எடுத்துள்ளது.

அவற்றில் அனைத்து ஒற்றை கிராம குடிநீர் திட்டங்கள், பல கிராமங்களை அடக்கிய 101 கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் பழைய குடிநீர் திட்டங்களில் புனரமைப்பு திட்டங்களாக 92 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடைமுறையில் முன்னேற்றத்தில் உள்ளன. ஆனால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கு ரூ.5,914 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3,112 கோடி நிலுவையில் உள்ளது. 2024-25 ஆண்டுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.2,434 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டங்களில் பணிகளின் முன்னேற்றத்தை நிலைநாட்டுவதற்கும், உரிய காலத்தில் இந்த திட்டத்தினை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2,550 கோடி விடுவித்துள்ளது. நடைமுறையில் உள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திட ஏதுவாக நிலுவைத் தொகையான ரூ.3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க, தாமதமின்றி நீங்கள் (பிரதமர் மோடி) தலையிட வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

மேலும், ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒகேனக்கல் (கட்டம்-3) கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவது யாதெனில், இந்தத் திட்டம் ரூ.8,428 கோடி செலவில் செயல்படுத்திட ஜல் சக்தி அமைச்சகத்தின் மாநிலத் திட்ட அனுமதி குழுவில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அனுமதிக்கப்பட்டது. அதில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்காக ரூ.2,283 கோடி அனுமதிக்கப்பட்டது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட உறுதியின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தில் முன்னெடுப்பு பணிகளை தொடங்கியது.

ஆனால் ஒன்றிய குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் துறை, இத்திட்டத்தினை நீட்டிக்க அனுமதி பெறும் வரை, ஒன்றிய அரசின் உதவியை தற்போது வழங்க இயலாது. இந்த முக்கியமான திட்டத்திற்கு இந்தக் கட்டத்தில் ஒன்றிய அரசு தனது ஆதரவிலிருந்து பின்வாங்குவது என்பது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதை பாதிக்கும் என்பதை வருத்துடன் இக்கடிதம் வாயிலாக தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். ஒன்றிய அரசின் சமீபத்திய ஜல் ஜீவன் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் முடிவினை கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

அப்போது தான் தமிழ்நாடு அரசு ஜப்பான் பன்னாட்டு முகமையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை தொடர இயலும். அதோடு, கூடுதலாக 10 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை ரூ.7,590 கோடி செலவில் செயல்படுத்திட திட்டமிட்டுள்ளோம். இதில் திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் உள்ளடக்கியுள்ளது. இந்த புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கு நிதி ஒப்பளிப்பு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஏதுவாக, ஒன்றிய அரசு தனது ஆதரவை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என நம்பிக்கை உள்ளது. இவ்விஷயத்தில் பிரதமாராகிய உங்களுடைய ஆதரவினையும், விரைவான தலையீட்டினையும் எதிர்பார்க்கின்றேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கு ரூ.5,914 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
* மீதமுள்ள ரூ.3,112 கோடி நிலுவையில் உள்ளது. 2024-25 ஆண்டுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.2,434 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
* கடந்த 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை.

Related Stories: