திருவண்ணாமலை, மார்ச் 10: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி சாமியார்கள் மனு அளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ ராம்பிரதீபன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள், சாலைவசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறை சார்ந்த பயிர்க்கடன்கள், புதிய நீர் தேக்கதொட்டி, தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 518 நபர்கள் மனு அளித்தனர்.
அதன்மீது, விரைந்த நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு டிஆர்ஓ உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். அதைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட டிஆர்ஓ, உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை நடத்தி உதவி உபகரணங்கள் விரைந்து வழங்க பரிந்துரைத்தார்.
இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் ஆஸ்ரமங்களில் தங்கியுள்ள சாமியார்கள், தங்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி மனு அளித்தனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, கடந்த 2014ம் ஆண்டு சுமார் 2000 சாமியார்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது எனவும், ஆனால் சமீபத்தில் நடந்த எஸ்ஐஆர் மூலம் சாமியார்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
எனவே, தற்போது தங்கியுள்ள இடங்களை முகவரியாக கொண்டு சாமியார்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, வழக்கம் போல கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
