×

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக நடந்தது திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, மார்ச் 10: திருவண்ணாமலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடந்தது. தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிந்து, பாதுகாப்பாக கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், வேட்புமனுக்கள் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மாவட்டங்களுக்கும் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய நகரங்களில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தோ- திபெத் பகுதியில் பணிபுரியும் 85 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தனர். அதைத்ெதாடர்ந்து, திருவண்ணாமலையில் நேற்று மாலை துணை ராணுவ வீரர்கள் நேற்று கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். காமராஜர் சிலை சந்திப்பு பகுதியில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலம், நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று, அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

அதில், திருவண்ணாமலை ஆயுதப்படை பிரிவு டிஎஸ்பி ராஜன் உள்பட போலீசாரும் கலந்துகொண்டனர். மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அல்லது வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் துணை ராணுவ அணிவகுப்பு நடத்துவது வழக்கம். ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே துணை ராணுவத்தினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியது பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tiruvannamalai ,Tamil Nadu ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர்...