நிதிஷ் குமாரை ஓரங்கட்டி அதிகார வேட்டை; பீகாரில் ‘சமூக நீதி’ அரசியலை ஒழித்து கட்டிய பாஜக: பின்வாசல் வழியாக மாநிலத்தை கைப்பற்றிய பரபரப்பு பின்னணி

பாட்னா: பீகார் மாநில முதல்வர் பதவியிலிருந்து விலகி நிதிஷ் குமார் மாநிலங்களவைக்குச் செல்வதால், பாஜக தனது ஆதிக்கத்தை மிகக்கச்சிதமாக முடித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.பீகாரில் 35 ஆண்டுகளாகத் கோலோச்சிய சமூக நீதி அரசியலை வீழ்த்தி, மக்களால் தனிப்பெரும்பான்மை அளிக்கப்படாத நிலையிலும், கூட்டணி என்ற போர்வையில் சதித்திட்டம் தீட்டி பீகார் அரியணையை பாஜக கைப்பற்றியுள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரை நிர்பந்தத்தின் பெயரில் மாநிலங்களவைக்கு அனுப்பிவிட்டு, முதல்முறையாக அம்மாநிலத்தில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட பாஜக மேலிடம் துடிக்கிறது. நேற்று பாட்னாவில் நடந்த நிகழ்வுகள், ஒரு ஜனநாயகத் தேர்தல் நடைமுறையாக இல்லாமல், டெல்லியின் ஆதிக்கத்தை உறுதி செய்யும் நிகழ்வாகவே அமைந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடிப் பார்வையில், நிதிஷ் குமார் மாநிலங்களவை வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், மூத்த தலைவரான நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக விடுவிக்கப்பட்டு டெல்லிக்கு ‘மாநிலத்தில் இருந்து கடத்தப்படுகிறார்’ என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் பீகார் சட்டப்பேரவை, சட்ட மேலவை மற்றும் லோக்சபா ஆகிய மூன்று அவைகளிலும் உறுப்பினராக பணியாற்றிய அவர், தற்போது தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக மாநிலங்களவைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இதன் மூலம் பீகார் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. நிதிஷ் குமார் டெல்லிக்கு செல்வதால் பீகார் மாநிலத்தில் முதல் முறையாக பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. இதற்காக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி மற்றும் ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரது பெயர்கள் தீவிர பரிசீலனையில் உள்ளன. மேலும் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வர் போன்ற முக்கிய பொறுப்பின் மூலம் அரசியலில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நிதிஷ் பதவி விலகுவார் என்றும், அதன் பிறகு பீகாரில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது. மக்களின் நேரடித் தீர்ப்பைப் பெறாமலேயே, கூட்டணிக் குழப்பங்களைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் ‘ஆபரேஷன்’ உத்தி பீகாரிலும் அரங்கேறியுள்ளது. ‘வாரிசு அரசியல் ஒழிப்பு’ என்று மேடைதோறும் முழங்கும் பாஜக, தனது அதிகாரப் பசிக்காக பீகாரில் சமரசம் செய்து கொண்டுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரை அரசியலுக்குள் இழுத்து, அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இது பாஜகவின் கொள்கை முழக்கங்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பு என்பதையும், அதிகாரத்திற்காக அவர்கள் எவருடனும் கைகோர்ப்பார்கள் என்பதையும் நிரூபிப்பதாக அரசியல் நோக்கர்கள் சாடுகின்றனர்.

கடந்த 1990ம் ஆண்டு முதல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் கட்டிக்காத்த ‘சமூக நீதி அரசியல்’ கோட்டையை, 2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து பாஜக தகர்த்துள்ளது. 2025 தேர்தலில் நிதிஷ் குமாரை முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்ற பாஜக, இப்போது அவரைத் தந்திரமாக ஓரங்கட்டிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மொத்தத்தில், பீகார் மாநிலத்தின் சுயாட்சித் தன்மையை நீர்த்துப்போகச் செய்து, டெல்லியின் கைப்பாவையாக மாநில அரசை மாற்றும் முயற்சியை பாஜக மிகக்கச்சிதமாக முடித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Stories: