முல்லை பெரியாறு விவகாரத்தில் கள நிலவரம் தெரியாமல் விஜய் பேசுகிறார்: விவசாய சங்க தலைவர்கள் விளாசல்

தஞ்சை: தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பழனியப்பன்: இயற்கையான முறையில் விவசாயம் செய்யும் எங்களுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். முல்லை பெரியாறு அணை விவகாரம் பற்றி முழுமையாக விஜய் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அணை தண்ணீர் விவசாயிகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர வேண்டும். கேரளா முதல்வர் பினராயி விஜயனை விஜய் நேரில் சந்தித்து முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்கு தீர்வு காண்பாரா.

தஞ்சை தோழகிரிப்பட்டி விவசாயி கோவிந்தராஜ்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் “உன் கருத்து என்ன” என்று கேட்கிறார்கள். அமைதியாக இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். ரிமோட்லி ஆப்ரேட்டடு வெகிக்கில் (ROV) போன்ற கருவியை பற்றி எனக்கு தெரியும் என்கிறார் விஜய். அதாவது, தண்ணீருக்குள் மனிதர்கள் நேரடியாக செல்ல முடியாத இடங்களில், தொலைவிலிருந்து இயக்கப்படும் சிறப்பு கருவிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளேன் என்று கூறுபவர் முல்லை பெரியாறு அணை விவகாரத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் திவாலாகும் என்று சொல்கிறார். நிலத்தடி நீர் சேமிப்பு, முல்லைப் பெரியாறு போன்ற முக்கிய நீர்வளப் பிரச்சினைகளில் வலுவான முடிவுகளை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு நிலத்தடி நீர் சேமிப்பிற்காக சென்னையில் 1000 இடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள், ரூ.6.74 கோடியில் செயற்கை நீர் நிரப்புதல் திட்டம், 118 ஏக்கர் பரப்பில் நீர்நிலைகள் உருவாக்கம் மற்றும் ரூ.52 கோடி மதிப்பிலான பள்ளி மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள் போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் சேமிப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
கிண்டி ரேஸ் கிளப்பில் மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலம் நீர்ப்பரப்பாக மாற்றப்பட்டு நிலத்தடி நீர் உயர்வுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ₹489 கோடி மதிப்பீட்டில் 48 புதிய நீர்வள மேம்பாட்டு திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மை மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டங்கள் நிலத்தடி நீர் பற்றாக்குறையை போக்கவும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யவும் செயல்படுத்தப்படுகின்றன. கூகுளில் போய் தேடாதீர்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறுகிறார்.

நீங்கள் கூகுளில் போய் தேடிப்பாருங்கள். நிலத்தடி நீர் மட்டம் உயர திமுக அரசு மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் பற்றி தெரியும். இயந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வதை நிறுத்தி விட்டு தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுக அரசு செய்துள்ள பணிகளை பற்றி தேடி பாருங்கள். இன்றைய நிலையில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் நிலத்தடி நீர் உயர திமுக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தண்ணீர் பிரச்சினை பற்றி தெரிந்து கொண்டு பேசவேண்டும்.

தஞ்சை விவசாயி ஜீவகுமார்: விஜய் முல்லைபெரியாறு பற்றி களநிலவரம் தெரியாமல் பேசுவது தவறு. விவசாயிகள் பிரச்னை, முல்லை பெரியாறு விவகாரம் தெரியாமல் யாரோ எழுதி கொடுத்ததை தனக்கு தெரிந்ததுபோல் பேசுகிறார். இது சினிமா அல்ல. முல்லை பெரியார் அணைக்கட்டு விவகாரம் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும். இயந்திரங்கள் என்பது அனைத்து வகையிலும் முழுமையான தீர்வை ஏற்படுத்தாது. எனவே விஜய் எந்த பிரச்னை பற்றி பேசினாலும் கற்பனை கலக்காமல் நேரடியாக முழுமையாக அதுகுறித்த நிலவரங்களை அறிந்து கொண்டு பேச வேண்டும். விவசாயிகள் வாழ்க்கையுடன் விளையாட்டு தனம் வேண்டாம்.

Related Stories: