சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.63 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.3.2026) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.63 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள “முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தினை” திறந்து வைத்தார். மேலும், “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில “தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 விழுக்காடு முன்னுரிமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் 47 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வரசு பொறுப்பேற்ற இந்த 5 ஆண்டுகளில், கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வித் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் நோக்கில் 38 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 4 வேளாண்மை கல்லூரிகளும், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, ஒரு சட்டக் கல்லூரி மற்றும் 41 தொழில்பயிற்சி கல்லூரிகள் என மொத்தம் 85 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு, 28,351 மாணவர்கள் கூடுதலாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டும் 252 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதால் 13,346 மாணவர்கள் கூடுதலாகவும் பயனடைந்து வருகின்றனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம்
சென்னை, மாநிலக் கல்லூரியில் 5.7.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு ஆற்றிய உரையில்,
“300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.” என்றும், “2000 பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும்.” என்றும் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான மாநிலக் கல்லூரி வளாகத்தில் 21 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதியினை 4.12.2024 அன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு, மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் 63 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள “முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தினை” தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் திறந்துவைத்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தின் சிறப்பம்சங்கள்
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கமானது 60,672 சதுர அடி பரப்பளவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய கலையரங்கம், நிர்வாக அலுவலகம், முக்கிய பிரமுகர்கள் அறை, கலைஞர்கள் ஓய்வு அறையுடன் கலையரங்கத்தின் தரைத்தளத்தில் 1,272 நபர்களும், முதல் தளத்தில் 800 நபர்களும் என மொத்தம் 2,042 நபர்கள் அமரக்கூடிய வகையில் “முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் புகழ் பெற்ற மாநிலக் கல்லூரியில், 5.7.2022 அன்று மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி அரசு கல்லூரியில் மிகப்பிரமாண்டமான முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தினை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாநிலக் கல்லூரி மாணவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., உயர்கல்வித்துறை செயலாளர் முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி, இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: