சென்னை, மார்ச் 4: போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது ெசய்தனர். சென்னை பன்னாட்டு விமான நிலையம் வழியாக, 48 வயதுள்ள பெண் ஒருவர், நேற்று முன்தினம் இந்திய குடிமகள் என்று கூறி, இலங்கை செல்ல முயன்றார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, அது போலி என தெரியவந்தது. உடனே அந்த பெண்ணை பிடித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, இலங்கை நாட்டை சேர்ந்த பேபி லோனா (48) என்றும், இவர் இந்தியரான முஸ்தாக் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டு, கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் இருந்து குடும்பத்துடன் விமானம் மூலம் சென்னை வந்து, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து வசித்து வந்தது தெரியவந்தது. இவர் தனது கணவரின் பெயரை பயன்படுத்தி, இலங்கை குடியுரிமையை மறைத்து, இந்திய குடிமகள் போன்று ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றது தெரியவந்தது. அந்த போலியான அடையாளங்களை வைத்து இந்திய குடிமகள் என்று போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், இலங்கை பெண் பேபி லோனாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
