திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவொற்றியூர், மார்ச் 3: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசாமி கோயிலில் மாசி பிரமோற்சவ விழா, கடந்த பிப்.22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவர் சந்திரசேகரர் சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், பூதம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாட வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடந்தது. இதில், உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 10 மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம், சிறப்பு வழிபாடு நடந்தது. கல்யாண சுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க காலை 11.20 மணியளவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

விழாவல் கலந்துகொண்ட பக்தர்களுக்கு திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மாவட்ட திமுக அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன் மற்றும் திமுகவினர் தண்ணீர் பாட்டில் மற்றும் அன்னதானம் வழங்கினார். விழாவில் பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதையொட்டி மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, இனிப்பு, வழங்கினர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் முல்லை, துணை கமிஷனர் ஹரிகரன், உதவி கமிஷனர் நற்ச்சோனை மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர். தொடர்ந்து, மகா தீபாராதனையும், மாலை 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும் நடந்தது. இரவு கல்யாணசுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடந்தது.

Related Stories: