சென்னை, மார்ச் 3: சென்னையில் உள்ள இறைச்சி கடைகளில் ஆடு, மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மிருக வதை சட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை வெட்ட தனி இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற இடங்களை தவிர வேறு இடங்களில் விலங்குகளை வெட்ட கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மற்ற விலங்குகளின் கண் முன்பு வெட்டக் கூடாது. ரத்தத்தை முறையாக சேகரிக்க வேண்டும். விலங்குகள் வெட்ட உருவாக்கப்பட்டுள்ள ஆடுதொட்டிகளில் கால்நடை மருத்துவர் சான்று அளிக்கும் விலங்குகளை மட்டுமே வெட்ட வேண்டும். நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வெட்டக் கூடாது. இந்த சட்ட விதிகளை மீறி, இறைச்சி கடைகளிலேயே விலங்குகள் வெட்டப்படுகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இந்த சட்ட விதிகள் பின்பற்றப்படுவதில்லை. கடைகளின் பின்புறமே ஆடுகள் வெட்டப்படுகின்றன. வெட்டப்படும் விலங்குகளின் ரத்தம், நேரடியாக கால்வாய்களில் கலக்கப்படுகிறது. கழிவுகள் குப்பை தொட்டிகளில் போடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே மிருகவதை சட்ட விதிகளையும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குறிப்பிட்டு எந்த கடையில் ஆடுகள் வெட்டப்படுகின்றன என்று கூறாமல் பொத்தாம் பொதுவாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
