மாசி மகத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி: பக்தர்கள் குவிந்தனர்

சென்னை, மார்ச் 4: மாசி மாத பவுர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திரம், மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளையொட்டி ஆண்டுதோறும் மாசி மகம் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என நம்பப்படுகிறது. இந்த நாளை தீர்த்தமாடும் நாள் என்றும் குறிப்பிடுவார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடுவார்கள். அந்த வகையில், நடப்பாண்டுக்கான மாசி மக விழாவையொட்டி நேற்று காலை பல்வேறு கோயில்களில் உள்ள உற்சவ மூர்த்திகள் மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்வு வெகு விமரிசையாக நடந்தது. குறிப்பாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவள்ளுவர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இருந்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, மெரினா கடற்கரையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, கடலில் மூழ்கி தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி நடந்த பின்னர் ஏராளமானோர் கடலில் நீராடினர்.

Related Stories: