திருவண்ணாமலை மத்திய மாவட்டத்தில் ஆரணி, போளூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் சிட்டிங் எம்எல்ஏவாக, மாஜி அமைச்சரான சேவூர் ராமசந்திரன் உள்ளார். இதில் மத்திய மாவட்டத்தோட, அதிமுக மாவட்ட செயலாளராக ஜெயசுதா உள்ளார். இவர் ஏற்கனவே போளூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ. அங்கு போதிய செல்வாக்கு இல்லை. திமுகவின் பலம் போளூரில் வலுவாக உள்ளது. இதனால் போளூரில் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என்று நினைத்துள்ளார். இதனால் ஆரணி தொகுதியில் சீட் கேட்டு தீவிரமாக வேலை பார்த்து வருகிறாராம். கட்சி நிர்வாகிகளிடம் எனக்குத்தான் இந்த முறை சீட் வழங்கப்போகிறார்கள்.
நான் கட்சி தலைமையிடம் பேசிவிட்டேன். எடப்பாடியின் கிச்சன் கேபினட் வரை எனக்கு செல்வாக்கு உள்ளது. தமிழ்நாட்டிலேயே நான் தான் பெண் மாவட்ட செயலாளர். மகளிர் அணி சார்பில் எப்படியும் இந்த தொகுதியை நான் கேட்டு வாங்கிவிடுவேன் என்று கூறிவருகிறார். அதேசமயம், நகரமன்றத்தில் உள்ள சில நிர்வாகிகளை கையில் வைத்துக்கொண்டு, அந்தந்த வார்டுகளில் தேர்தல் பணியாற்ற 5 பேர் வேண்டும் என்று பட்டியல் கேட்டுள்ளார். இதில் நகர செயலாளர் ஒருவர் மாஜி அமைச்சரின் ஆதரவாளர். உடனே அவர் இந்த தகவலை சேவூர் ராமசந்திரனிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர் எந்த பட்டியலையும் யாரிடமும் தரவேண்டாம். நான் தான் சிட்டிங் எம்எல்ஏ, இந்த முறையும் நான்தான் போட்டி போடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் மாவட்ட செயலாளர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து சில பேரின் பட்டியலை வைத்துக்கொண்டு தேர்தல் பணியில் இறங்கிட்டாராம். ஆனாலும், மாவட்ட செயலாளருக்கு ஆரணி சட்டமன்ற தொகுதியில் போதிய செல்வாக்கும் இல்லை. மாவட்ட செயலாளராக ஜெயசுதா வந்தபின்னர், 360 பேருக்கு போஸ்டிங் போட்டார்களாம். ஒன்றியம், நகரம் பொறுப்பு போடப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் உட்பட முக்கிய பொறுப்புக்கு 2 எல் டூ 10 எல் வரையில் வாங்கிட்டாங்களாம்.
இதனால, போஸ்டிங் வாங்கிட்டு வந்தவர்கள் அனைவரும் ஜெயசுதாவுக்கு எதிராக உள்ளார்களாம். அதோடு கட்சிக்குள்ளாகவே, போளூரில் உள்ளவர்களுக்கு ஆரணியில் சீட்டு கொடுக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். சேவூர் ராமசந்திரன் அமைச்சராக இருந்ததோடு உயர்மட்ட அளவில் தொடர்பிலும் உள்ளதால், நான் எப்படியும் ஆரணிக்கு சீட் வாங்கியே தீருவேன் என்று காய் நகர்த்தி வருகிறாராம். இப்படி இலை பார்ட்டியில் மாஜி அமைச்சருக்கும், மாவட்ட செயலாளருக்கும் சீட்டுக்கு மோதல்கள் வலுத்து வருவதால் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் நாம மாவட்ட செயலாளரின் பின்னால் செல்வதா? அல்லது மாஜி அமைச்சரான சிட்டிங் எம்எல்ஏ பின்னால் செல்வதா என தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்களாம்.
