இந்தியா – கனடா இடையே யுரேனியம் விநியோகம் குறித்த ஒப்பந்தம்: பிரதமர் மோடி- மார்க் கார்னி முன்னிலையில் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியா- கனடா இடையே யுரேனியம் விநியோகம் ஒத்துழைப்பு தொடர்பான ஒரு முக்கிய ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியது. கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, அவரது மனைவி டயானா பாக்ஸ் ஆகியோர் கடந்த 27ம் தேதி இந்தியாவிற்கு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் கனடா பிரதமர் மார்க் கார்னியை பிரதமர் மோடி சந்தித்தார். இருநாட்டு பிரதமர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். மேற்கு ஆசியாவின் ஆபத்தான பாதுகாப்பு நிலைமை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

தொடர்ந்து முக்கியமான கனிமத் துறையில் ஒத்துழைப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்களில் இரு நாட்டு அதிகாரிகள் கையெழுத்திட்டனர். சிவில் அணுசக்தித்துறையில் நீண்டகால யுரேனியம் விநியோகத்திற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் கனடா இந்தியாவிற்கு யுரேனியத்தை வழங்க உள்ளது. விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளையும் இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினார்கள். 2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு ஆண்டு வர்த்தகத்தை 50பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவது உள்ளிட்ட உறவுகளை வலுப்படுத்த ஒரு புதிய கட்டமைப்பையும் இருநாட்டு பிரதமர்களும் இறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி,‘‘இந்தியாவும், கனடாவும் ஜனநாயக விழுமியங்களில் அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டுள்ளன. நாங்கள் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறோம். மனித குலத்தின் நல்வாழ்வு எங்களது பகிரப்பட்ட பார்வையாகும். இந்த தொலைநோக்குப் பார்வை ஒவ்வொரு துறையிலும் முன்னேற நம்மைத் தூண்டுகின்றது. இந்த தொலைநோக்குப் பார்வையை அடுத்த கட்ட கூட்டாண்மையாக மாற்றுவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியாவும், கனடாவும் பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து பாடுபடும்.

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளையும் இரு தரப்பினரும் விவாதித்தோம். தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாக்கல் இருநாடுகளுக்கும் மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்திற்கும் பகிரப்பட்ட மற்றும் கடுமையான சவால்கள் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அவற்றுக்கு எதிரான நமது நெருங்கிய ஒத்துழைப்பு உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமானது” என்றார். மேலும் கனடா பிரதமர் கார்னி கூறுகையில், கனடாவும், இந்தியாவும் எதிர்காலத்திற்கான தங்களது சொந்த பாதையை வகுத்துக்கொள்கின்றன. இது புதிய லட்சியங்களுடன் மதிப்புமிக்க கூட்டாண்மையின் விரிவாக்கமாகும்” என்றார்.

Related Stories: