கோவை மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 10 தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை ஐந்து தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் என பார்த்து, பார்த்து கடந்த பல தேர்தல்களில் வாக்குகள் அளித்து வந்தவர்களின் வாக்குகள் கூட இந்த முறை அதிமுகவிற்கு எதிராக செல்லும் என தெரியவந்துள்ளது. தவிர, இளம் தலைமுறைகளின் வாக்குகள் திமுக, தவெக, நாதக போன்ற கட்சிகளுக்கு பிரிந்து செல்ல வாய்ப்பு இருப்பதால், இளசுகளின் வாக்குகளை பெற எடப்பாடி உத்தரவின் பேரில் கடந்த சில வாரங்களாக இளைஞர்கள் அதிகமாக கூடி கிரிக்கெட் விளையாடும் இடங்களில் அதிமுகவினர் வட்டமிட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை அழைத்து உங்களுக்கு கிரிக்கெட் கிட் அளிக்கிறோம். 11 பேர் கொண்ட டீம் உறுப்பினர்கள் விவரங்களை மட்டும் தாருங்கள் என கேட்டு வருகின்றனர். இவர்களின் ஆசைவார்த்தை பேச்சுகளை கேட்டு விவரங்களை அளித்த இளைஞர்களுக்கு அதிமுகவின் சார்பில் கிரிக்கெட் கிட் வழங்கப்பட்டு வருகிறது. கோவை நகர், புறநகர் என அனைத்து பகுதிகளிலும் அதிமுகவினர் இளைஞர்களை குறி வைத்து கிரிக்கெட் கிட்களை வழங்கி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரது புகைப்படங்களுடன் கூடிய கிரிக்கெட் கிட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தவிர, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இளசுகளை கவரும் வகையில் அதிமுகவினர் கிரிக்கெட் கிட்களை வழங்கி வருகின்றனர்.
