சொன்னாரு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் “உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்” (நலம் காக்கும் ஸ்டாலின்) என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
செஞ்சாரு: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் வட்டாரத்திற்கு 3 என்கின்ற வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 என்கின்ற வகையிலும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 என்கின்ற வகையிலும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 என்கின்ற வகையிலும் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு, தமிழ்நாடு முதல்வர் இந்த திட்டத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் அடிப்படையில் கடந்த 27ம் தேதி உடன் 1,256 முகாம்கள் வெற்றிகரமாக முடிவுற்று மக்கள் பேராதரவு பெற்றுள்ளது. இந்த திட்டத்தைப் பொறுத்தவரை பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறுயியல் மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவம் என்று 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் இதன் மூலம் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் நடைபெற்ற 1256 முகாம்களில் பயன்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 18,52,561 ஆகும். தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,256 முகாம்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை புதிதாக பெற்றவர்களின் எண்ணிக்கை 50,190 பேர். மேலும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் 60,682 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை சார்பில் பயன்பெற்ற பயனாளிகள் எண்ணிக்கை 3,55,584, அமைப்புச் சாரா தொழிலாளர்கள் 2,78,739, தூய்மை பணியாளர்கள் 96,352 பேரும் பயன்பெற்றிருக்கிறார்கள். இந்த முகாம்கள் மூலம் புதிதாக நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து மேல்சிகிச்சைக்கு பரிந்துரைத்து அவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
* ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடந்த மருத்துவ முகாம் மூலம் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் விவரம்
புற்றுநோய் பாதிப்பு 222 பேர்
கண்புரை நோய் 8,401 பேர்
காசநோய் 595 பேர்
இதய நோய் பாதிப்பு 1,626 பேர்
நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு 3,877 பேர்
புதிதாக சர்க்கரை நோய் பாதிப்பு 1,50,708 பேர்
உயர் ரத்த அழுத்தம் 4,28,454 பேர்
சிறுநீரக பாதிப்பு 46,409 பேர்
ரத்த சோகை 66,251 பேர்
மொத்தம் 7,06,543 பேர்
