காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு

பென்னாகரம், மார்ச் 3: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், நேற்று சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், பெருமணம் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது மகன் விக்னேஷ் (24). இவர் ஓசூர் பேளகொண்டபள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், தனது நண்பர்கள் 10 பேருடன், காரில் நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு வந்தனர். அவர்கள் ஒகேனக்கல்லில், பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்னர், ஒகேனக்கல் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற விக்னேஷ் மீண்டும் திரும்பவில்லை. இதை கண்ட நண்பர்கள் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், ஆற்றில் விக்னேசை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அதே இடத்தில் விக்னேஷ் சடலமாக மீட்கப்பட்டார். தகவலின் பேரில், ஒகேனக்கல் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: