வேடசந்தூர், மார்ச் 3: வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (80) விவசாயி. இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்த நிலையில், இரு மகன்களும் அவர்களின் மனைவி, குழந்தைகளுடன் வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த பிப்.27ம் தேதி அதிகாலை வீட்டில் தனிமையில் சண்முகம் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர், சண்முகத்தின் தலையில் பாட்டிலால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்த நிலையில், வீட்டில் இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2 ஆயிரத்தை திருடிக்ெகாண்டு மர்ம நபர்கள் தப்பினர்.
அப்பகுதியில் வசிப்பவர்கள் உதவியுடன் சண்முகம் மீட்கப்பட்டு, வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், குற்றவாளிகளை பிடிக்க வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மூர்த்தி மேற்பார்வையில், எஸ்ஐ பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, மேல்மாத்தினிப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (20) மற்றும் இரு சிறுவர்களை கைது செய்தனர்.
மற்றொருவரை தேடி வருகின்றனர். கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
