பதற்றம் அதிகரித்து அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தடுக்க உலக நாடுகளும், ஐக்கிய சபையும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் கொமைனி படுகொலை அமெரிக்க, இஸ்ரேலிய ஏகாதிபத்தியத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்று உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. தங்களுக்கு அடிபணிய மறுக்கும் நாடுகளின் தலைவர்களை மிரட்டி, கைது செய்து, இறுதியில் படுகொலை செய்யும் கொடூரமான ரவுடித்தனம் இவர்களின் தொடர்கதையாக உள்ளது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவர் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல், ஐ.நா. சபையையும் சர்வதேச சமூகத்தையும் அவமதிக்கும் செயலாகும். தனக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நாடுகளின் மீது பொருளாதாரத் தடை விதிப்பதும், உள்நாட்டுக் குழப்பங்களை தூண்டிவிடுவதும், ராணுவத் தலையீடு செய்வதுமே இவர்களின் கேடுகெட்ட அரசியலாகியுள்ளது.

சுதந்திர இந்தியா காலந்தொட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக களம் கண்டுள்ளது. அநீதிக்கும் எதிராக குரல் கொடுத்து வந்த இந்திய அரசு, இன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அட்டூழியங்களைக் கண்டும் காணாதது போல் செயல்படுவதும், அவற்றுடன் கைகோர்த்துச் செல்வதும் வெட்கக்கேடானது. இன்று ஈரானில் நடந்தது, நாளை எந்த நாட்டிற்கும், நமது அண்டை நாடுகளுக்கும், எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் கூட ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். இந்த ஆபத்தான சூழலில், உலக நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்க-இஸ்ரேலிய ஏகாதிபத்தியத்தை முறியடிக்காவிட்டால், உலக அமைதி முற்றிலும் சீர்குலையும். ஈரான் மீதான இந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலை தாக்குதலையும், ஏகாதிபத்திய சக்திகளின் மிரட்டல் அரசியலையும் நாங்கள் முற்றிலும் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் போர் பதற்றம் அதிகரித்து அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

Related Stories: