தண்டையார்பேட்டை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 19.70கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆர்.கே.நகர் விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். விளையாட்டு வீரர்களுடன் விளையாடினார். சிஎம்டிஏ.சார்பில் 21.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தண்டையார்பேட்டை பேருந்து நிலையம், மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் 33.82 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட தண்டையார்பேட்டை மின்சார பேருந்து பணிமனை ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 1627.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது கட்டமாக 750 மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் 7 பேருந்து பணிமனைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 6 பணிமனைகள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்து புதிதாக மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராயபுரம் கல்லறை சாலை ஆர்எஸ்ஆர் மருத்துவமனை அருகே ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி நிதி 10.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திருமண மாளிகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவசங்கரன், சென்னை மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், திமுக பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், வ.பெ. சுரேஷ், செந்தில்குமார், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, போக்குவரத்துக்கழக முதன்மை செயலர் சுன்சோங்கம் ஜேக் சிரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
