உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணித்த 43 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்து நேற்று இரவு 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த சரவணன் (46) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தபோது பிரேக் சிஸ்டத்தில் திடீரென தீப்பிடித்ததை அறிந்த டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரம் அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் அருகிலுள்ள உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பயணிகள் கீழே இறங்கிய சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதுமாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்த நிலையில் அங்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக் கூடுபோல் காட்சியளித்தது. இந்த சம்பவத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
