தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் கிராமத்திலுள்ள தனியார் தீப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டி குடோனில் இன்று (02.03.2026) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த தீ விபத்தில் கோவில்பட்டி வட்டம், கொடுக்கம்பாறை கிராமம், விஜயாபுரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 27) த/பெ.சமுத்திரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து (வயது 42) மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோவில்பட்டி வட்டம், கிழவிபட்டி கிராமம், துரைசாமிபுரம் பகுதியில் வசித்துவரும் கணேசன் (வயது 47) ஆகிய இருவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
