தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா? நாளை கருத்து கேட்கிறார் ராமதாஸ்

திண்டிவனம்: தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா? என்பது தொடர்பாக தைலாபுரத்தில் பாமக இளைஞர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட 2ம் மட்ட நிர்வாகிகளிடம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நாளை கருத்து கேட்கிறார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி தனித்தனி அணியாக தேர்தலை சந்திக்கின்றனர். தேஜ கூட்டணியில் அன்புமணி இணைந்து தேர்தல் வேலைகளை தொடங்கி விட்ட நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் தைலாபுரத்தில் விருப்ப மனுக்களை வாங்கிய ராமதாஸ் தரப்பிலோ இறுதிவரை கூட்டணி உறுதி செய்யப்படவில்லை.

ஏற்கனவே பாமக அன்புமணியால் சரிவை சந்தித்ததாக தன் மகன் மீது வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்த ராமதாஸ், தனது தலைமையில் கட்சி மீண்டும் செயல்பட்டால்தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என குறிப்பிட்டே புதிய பயணத்தை தொடங்கி உள்ளார். கடந்த வாரம் பாமக தலைமை நிர்வாக குழு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கூட்டணி தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் மாறுபட்ட கருத்துக்களை நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். சிலர் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், சிலர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறியிருந்தனர். இதனால் குழப்பமான மனநிலையில் ராமதாஸ் இருப்பதாக தகவல் வெளியாகின.

இதையடுத்து கூட்டணி தொடர்பாக பாமக இளைஞர், மகளிர் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகளின் மனநிலையை அறிய முடிவெடுத்த ராமதாஸ் நாளை (3ஆம்தேதி) இதற்கான கலந்தாய்வு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது தைலாபுரம் தோட்டத்தில் பாமக இளைஞர், மகளிர், மாணவர் சங்கங்கள், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகள் அனைவரும் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டுமென தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட கட்சியுடன் கூட்டணி இருக்கும் என ராமதாஸ் தொடர்ந்து கூறிவந்தாலும், தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற கருத்தை நிர்வாகிகளில் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கட்சியின் இளைஞர், மகளிர் மற்றும் 2ம் மட்ட நிர்வாகிகளை அழைத்து ராமதாஸ் கருத்து கேட்பதால் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்துக்குபின் கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இறுதி முடிவெடுத்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: