ஆறுமுகநேரி, மார்ச் 2: ஆறுமுகநேரி பகுதியில் நீர்த்தேக்க தொட்டி, பயணியர் நிழற்குடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். ஆறுமுகநேரி பேரூராட்சி பேயன்விளை பகுதியில் 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் ராஜாமணியபுரத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஆர்டிஓ கவுதம், தாசில்தார் தங்கமாரி, பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நீர்த்தேக்க தொட்டி, பயணியர் நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் செல்வகுமார், துணை அமைப்பாளர் கிருபாகரன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ஜனகர், வர்த்தக அணி அமைப்பாளர் ரங்கநாதன், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீத பாண்டியன், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் சரவண வெங்கடேஷ், பேரூராட்சி சுகாதார அலுவலர் வெற்றிவேல் முருகன், மேற்பார்வையாளர் கார்த்திக், நகர துணை செயலாளர் அகஸ்டின், கிஷோக், கவுன்சிலர்கள் ஆறுமுகநயினார், சிவகுமார், சந்திரசேகர், நகர பொருளாளர் பாலகிருஷ்ணன், வர்த்தக அணி அமைப்பாளர் லட்சுமணன், நிர்வாகிகள் ராஜா டேவிட், அந்தோணி வெர்ஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
