வாலாஜாபாத் பாரதி நகரில் புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது

வாலாஜாபாத், மார்ச் 2: வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்டது பாரதி நகர் பகுதி. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாரதி நகர் 3வது தெரு பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்று எந்த நேரத்திலும் கீழே விழும் அளவிற்கு எலும்புக்கூடாக காட்சி அளித்து வந்தது. இந்த மின் கம்பத்தில் உள்ள சிமென்ட் பூச்சு அனைத்தும் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு காணப்பட்டிருந்தன.

இதனால் மின் கம்பத்தின் அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் நாள்தோறும் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து பலமுறை வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் மின் கம்பத்தை மாற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதனையடுத்து வாலாஜாபாத் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டு அங்கு எலும்புக்கூடு போன்று காட்சியளித்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ்க்கும் இருப்பினும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: