மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல் தலைவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் மாடல் அழகிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் போதைப்பொருள் கும்பலின் தலைவனான நெமேசியோ ரூபன் ஒஸ்குவேரா செர்வாண்டஸ், கடந்த 22ம் தேதியன்று ராணுவத்தினர் நடத்திய அதிரடி வேட்டையில் கொல்லப்பட்டார். முன்னதாக அவரோடு தொடர்புடைய ஒரு பெண்ணின் நண்பரை ரகசியமாக பின்தொடர்ந்து சென்ற பாதுகாப்பு படையினர், டாபல்பா பகுதியில் பதுங்கியிருந்த அவரை சுற்றி வளைத்த போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார்.
இந்த மோதலில் அந்த போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 25 வீரர்கள் உயிரிழந்தனர். தனது தலைவன் கொல்லப்பட்டதற்கு மரியா ஜூலிசா எனும் சமூக வலைதள மாடல் அழகி தான் காரணம் என அந்த தீவிரவாத கும்பல், தற்போது குற்றம் சாட்டியுள்ளது. ஜாபோபன் நகரில் உள்ள ஒரு பாலத்தில் அந்த கும்பலால் வைக்கப்பட்ட பேனரில், மாடல் அழகிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மரியா, ‘இந்தச் சம்பவத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார். ராணுவத் தரப்பிலோ, ஒரு ரகசிய நபர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இந்த வேட்டை நடந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கருதும் மரியா, வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தனது 3.5 மில்லியன் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
