காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் (டிடிபி) தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் அடிக்கடி தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் பக்டிகா மாகாணங்களில் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை நடத்திய இந்த தாக்குதலில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது.
இதை மறுத்த ஆப்கானிஸ்தானில் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் இறந்ததாக குற்றம்சாட்டியது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் ராணுவ படையின் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நங்கர்ஹார் மற்றும் பக்டியா மாகாணங்களில் பாகிஸ்தான் படை சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பிப்ரவரி 26ம் தேதி இரவு கடுமையான பதில் தாக்குதல் தொடங்கியிருக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த பதிலடி தாக்குதல் குறித்தும் உயிரிழப்புகள் குறித்தும் பாகிஸ்தான் தரப்பில் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
