தலிபான் நடத்திய தாக்குதலில் 55 பாக். வீரர்கள் பலி
133 ஆப்கான் வீரர்களை கொன்றதாக பாக். அறிவிப்பு
கராச்சி: ஆப்கான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னை காரணமாக நடந்த போரில் தலிபான் படைகள் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளின் துரந்த் எல்லைக் கோட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த 22ம் தேதி அன்று பாகிஸ்தான் விமானப் படை, ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பக்திகா மாகாணங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதம் தொடர்புடைய முகாம்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் தரப்பு கூறியது.
ஆனால், இதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு குற்றம் சாட்டியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு, தற்போது அது நேரடிப் போராக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் தற்போது வரை நடந்துள்ள பதிலடித் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 55 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 19 ராணுவச் சோதனைச் சாவடிகளைத் தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், கோஸ்ட் மாகாணத்தில் உள்ள அஞ்சர் சார் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தானின் முக்கிய ராணுவத் தலைமையகத்தைத் தலிபான் வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அத்துடன் 23 வீரர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சிலர் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்த புகார்களைப் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாகப் பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறுகையில், ‘எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் படைகள் காரணமின்றி நடத்திய தாக்குதலை முறியடித்துள்ளோம். இதில் 2 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலில் 133 ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் எந்தவொரு ராணுவச் சோதனைச் சாவடியும் தலிபான்களால் கைப்பற்றப்படவில்லை’ என்று தெரிவித்தார். இந்த மோதலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் கசாப் லில் ஹக்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பெரும் போர்ச் சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் துர்க் கவலை தெரிவித்துள்ளார். பிராந்திய அமைதியைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளும் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஏற்பட்டுள்ள இந்த எல்லை மோதலால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன.
