ராமதாசுக்கு ஐஸ்… அன்புமணிக்கு குச்சி… பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பாஜ: தேஜ கூட்டணியில் இணைகிறார் ராமதாஸ்?

 

திண்டிவனம்: பாமகவில் ராமதாசை தேஜ கூட்டணிக்கு இழுக்க ஐஸ் வைத்துள்ள பாஜக, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாக அன்புமணிக்கு அன்பு எச்சரிக்கை விடுத்து சைலண்ட் ஆக்கியுள்ளது. இதனால் தேஜ கூட்டணியில் ராமதாஸ் இணைவது உறுதியாகி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமகவில் ராமதாஸ், அன்புமணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கட்சி இரண்டாக செயல்பட்டு வருகிறது. 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கான அதிமுக, பாஜக கூட்டணியில் கடந்த ஜனவரி 7ஆம்தேதி அன்புமணி இணைந்தார். ஆனால் கூட்டணி குறித்து ராமதாஸ் இதுவரை அறிவிக்காமல் உள்ளார்.

கடந்த கால தேர்தல்களில் பாஜ அழுத்தத்தால் மகன் அன்புமணிக்காக தேஜ கூட்டணியில் பயணிக்க நிலையை சுட்டிக் காட்டிருந்த ராமதாஸ், மாற்று அணியில் சேரும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் கூட்டணி பந்தயத்தில் முந்திக் கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது. இதையடுத்து பாமக தலைமை நிர்வாக குழு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தைலாபுரம் அழைத்த பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களிடம் கூட்டணி தொடர்பாக இறுதிகட்ட கலந்தாய்வு நடத்தினார். அப்போது பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதை பொருட்படுத்தாத ராமதாஸ், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கருத்துக்களை தனிப்பட்ட வகையில் ராமதாஸ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக, திமுக கூட்டணிக்கு சென்ற நிலையில் இந்தியா கூட்டணி கூடுதல் பலம் பெற்றுள்ள நிலையில் ஒன்றுபட்ட பாமகவை அதிமுக அணியில் ஏற்படுத்த வேண்டிய நெருக்கடி தேஜ கூட்டணியை திரைமறைவில் இயக்கும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கள் கூட்டணியில் உள்ள அன்புமணிக்கு பி-பார்ம், சி-பார்ம் கையெழுத்து படிவத்தை வைத்து அமைதி கடிவாளம் போட்டுள்ள பாஜ, ராமதாசிடம் ரகசிய பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

பாமகவின் சின்னம் முடக்கப்படாமல் இருக்க உரிமையியல் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கை உடனே வாபஸ் வாங்குவதோடு, தங்களுக்குகீழ் அன்புமணி பயணிப்பார் என்ற ‘ஐஸ்’ உத்தரவாதத்தை பாஜ அளித்துள்ளதாக தைலாபுரத்தில் தகவல் கசிகிறது. இவ்வாறு ஒன்றுபட்ட பாமகவாக கூட்டணிக்கு வரும்பட்சத்தில் அக்கட்சிக்கான தொகுதிகளை மட்டுமே ஒதுக்கிவிட்டு அவர்களது உள்ஒதுக்கீடு விவகாரத்தில் தலையீடு கூடாது என எடப்பாடிக்கும் பாஜ டெல்லி வட்டாரங்கள் கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேஜ கூட்டணியில் ராமதாசை ெகாண்டு வருவதில் டெல்லி பாஜகவே நேரடியாக இறங்கியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் தனது நிலைப்பாட்டினை ராமதாஸ் அறிவிப்பார் என தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது தைலாபுரத்தில் நேற்று பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்குபின் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மேற்கு எம்எல்ஏ தெரிவித்த சில கருத்துக்களின் அடிப்படையில் அவை ஊர்ஜிதமாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்களும் கூறுகின்றனர். ராமதாசை மதிக்கிற, பாமகவை மதித்து எங்களோடு கூட்டணி வைக்க விரும்புபவர்களோடு மட்டுமே கூட்டணி, எல்லா பக்கமும் நெருக்குதல் இருக்கு. ராமதாசை கூட்டணியில் இணைத்தால்தான் வெற்றிபெற முடியும் என்று நினைக்கிறார்கள், அந்த உண்மை அவர்களுக்கு கொஞ்சம் காலதாமதமா தெரிஞ்சிருக்கு என அருள் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டும் அரசியல் விமர்சகர்கள், கூட்டணிக்கான வற்புறுத்தலோ, அழுத்தமோ இல்ல… அன்பு வேண்டுகோள் மட்டுமே வைக்கிறாங்க…

எங்ககிட்ட வாங்க, எங்ககிட்ட வாங்கன்னு கூப்பிடுறாங்க… பிரதமர் மோடியை ராமதாஸ் சந்திப்பதில் என்ன தப்பு? என்ற கருத்தை புறந்தள்ளி விட முடியாது எனக் கூறும் அரசியல் விமர்சகர்கள், ராமதாஸின் பாமக அணியும் தேஜ அணியில் இணைவது தொடர்பான அறிவிப்பு நிச்சயமாக ஓரிரு நாட்களுக்கு தைலாபுரத்தில் இருந்து வரும் என தெரிவிக்கின்றனர். இதனால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் பாஜகவின் ‘குச்சி’ ராஜதந்திர வலையில்தான் அன்புமணியின் தற்போதைய அரசியல் பயணம் இருப்பதால் இரண்டாக வெட்டப்பட்ட மாம்பழம் வேண்டுமானால் ஒட்டப்படலாம், ஆனால் இவர்களுக்காக ஒருவரையொருவர் அடித்துக் கொண்ட நிர்வாகிகள், தொண்டர்களின் மனநிலை ஏற்குமா? என்பது கேள்விக் குறிதான்.

Related Stories: